ETV Bharat / sitara

பொது இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அனுமதி - கால அவகாசம் கேட்கும் நடிகர் உதயா

author img

By

Published : Nov 22, 2021, 6:23 PM IST

Udhaya
Udhaya

தமிழ்நாட்டில் பொது இடங்களுக்கு செல்ல கரோனா தடுப்பூசி செலுத்திவர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற அரசாணையை செயல்படுத்த சிறிது கால அவகாசம் கொடுக்குமாறு நடிகர் உதயா முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு அரசு கரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி வாரந்தோறும் சிறப்பு முகாம் நடத்தி அதிகமான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தற்போது வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொது சுகாதார சட்டத்தில் திருத்தம்

வாரத்திற்கு இரண்டு நாள்கள் எனத் தடுப்பூசி முகாமை விரிவுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் எனத் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பொதுவெளியில் மக்கள் கூடும் இடங்களான பூங்காக்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றில கரோனா தடுப்பூசி (Corona vaccination) செலுத்தியது குறித்து அரசு அலுவலர்கள் உறுதிசெய்யவேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிலையில் 'மாநாடு' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்பு வெளியானது, வேண்டுமென்றே சிம்புவின் வெற்றியைத் தடுப்பதற்காகவே செய்த சதித் திட்டம் எனச் சமூக வலைதளங்களில் கருத்துகள் உலா வருகின்றன. அதுமட்டுமல்லாது கரோனா பரவல் அச்சம் மக்களிடையே குறைந்து திரையரங்குகளுக்கு வரும்வேளையில் இந்த அறிவிப்பால் மீண்டும் திரையரங்குகளுக்கு மக்கள் யாரும் வரமாட்டார்கள் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாணைக்கு சிறிது கால அவகாசம் தேவை

இந்நிலையில், நடிகர் உதயா, பொதுவெளியில் வரும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற அரசாணைக்கு சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு, அன்பு வணக்கம். பதவி ஏற்ற நாள் முதல் பம்பரமாக சுற்றி சுழன்று அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லாட்சி வழங்கி எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும் உழைப்புக்கு உதாரணமாகவும் விளங்கி வருகிறீர்கள்.

கரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தாங்கள் தொடர்ந்து எடுத்து வரும் அற்புதமான நடவடிக்கைகளுக்கு மிக்க நன்றி. தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லாதவர்களை நேற்று (நவ. 21) முதல் திரையரங்குகள் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வருகின்றன என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு எடுத்து வர விரும்புகிறேன். இதனால் பல திரையரங்குகளில் பார்வையாளர்களே இல்லை எனலாம்.

திடீர் அறிவிப்பால் புதியப்படங்களின் வசூல் பாதிப்பு

கரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்கான தங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனமாரப் பாராட்டுகிறோம். தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லாதவர்கள் திரையரங்குகள் மற்றும் மால்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறித்த விழிப்புணர்வை போதுமான அளவில் மக்களிடம் ஏற்படுத்த சிறிது கால அவகாசத்தை வழங்குமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஏனென்றால், இந்த திடீர் அறிவிப்பின் காரணமாக புதிய திரைப்படங்களின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பிலிருந்து திரையுலகம் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், இதனால் மீண்டும் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, எனது கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். கரோனாவை ஒழிப்பதற்கான தங்களின் முயற்சிகளுக்கு மனமார்ந்த ஒத்துழைப்பை வழங்க திரையுலகம் உள்ளிட்ட அனைவரும் உறுதி கூறுகிறோம். மிக்க நன்றி" என உதயா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மாநாடும்... உதயநிதியும்: தடுப்பூசி விவகாரத்தில் குமுறும் தயாரிப்பாளர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.