தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. பொதுச்செயலாளர் பதவிக்கு ஆர்.வி. உதயகுமாரும், பொருளாளர் பதவிக்கு இயக்குநர் பேரரசுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் அடுத்து வரக்கூடிய இரண்டு ஆண்டிற்கான தலைவர், இரண்டு துணைத் தலைவர், நான்கு இணை செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தலில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலின் அலுவலராக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க வளாகத்தில் நடைபெறும் இந்தத் தேர்தல் காலை ஏழு மணிக்கு தொடங்கியது.
இதில் தகுதியுள்ள இரண்டாயிரத்து 45 பேர் வாக்களிக்க உள்ளனர். தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி, வித்யாசாகர் போட்டியிடுகின்றனர். இரண்டாவது தலைவர் பதவிக்கான தேர்தலில் கே.எஸ். ரவிக்குமார், ரவிமரியா, வேல்முருகன் ஆகியோரும், நான்கு இணை செயலாளர்கள் பதவிக்கு லிங்குசாமி, சுந்தர் சி உள்ளிட்ட 6 பேரும் போட்டியிடுகின்றனர்.
இதுதவிர 12 செயற்குழு உறுப்பினர் பதவிக்காக மனோபாலா, ரமேஷ்கண்ணா உள்ளிட்ட 30 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் நான்கு மணிக்கு முடிவடைந்த பின் ஐந்து மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தேர்தலில் வாக்களித்த பின் பேசிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், "புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா சரியாக பேசியுள்ளார். நல்ல கருத்துகளைதான் பேசியுள்ளார். அவருடைய முழு பேச்சையும் நான் கேட்டேன், அகரம் கல்வி அறக்கட்டளை நடத்திவருவதால் கல்விக் கொள்கை குறித்து தகவல்கள் அவருக்கு தெரிய வாய்ப்பிருக்கிறது.
வாய்ப்பு கிடைத்ததால் அவர் பேசினார். எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நாங்களும் அது குறித்து பேசுவோம். புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசிய பிறகுதான் எங்களுக்கே அது குறித்து தெரிகிறது" என்று கூறினார்.