ETV Bharat / sitara

பிரமாண்ட செட்டில் உருவாகும் 'சினம்' ஆக்‌ஷன் காட்சி

author img

By

Published : Feb 27, 2020, 10:00 AM IST

sinam
sinam

அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'சினம்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாக படத்தின் இயக்குநர் குமாரவேலன் கூறியுள்ளார்.

சமீபகாலமாக வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்துவரும் அருண்விஜய்யின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மாஃபியா' படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதனையடுத்து அருண் தனது 30ஆவது படமான 'சினம்' படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கும் இப்படத்தில் அருண் விஜய், பாரி வெங்கட் என்னும் கதாபாத்திரத்தில் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகியாக பாலக் லால்வாணி நடிக்கிறார். நடிகர் காளிவெங்கட் மிக முக்கியக் பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் காட்சி ஒன்றுக்கு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குமாரவேலன் கூறுகையில், 'இந்த ஆக்‌ஷன் காட்சி படத்தில் மிக முக்கியமான கட்டத்தில் முக்கியப்பங்கு வகிக்கக்கூடியது. இந்த காட்சி நேரடியாக பொது இடத்தில் எடுக்க முடியாது என்பதால் இதனை செட் அமைத்து எடுக்கலாம் எனத் திட்டமிடப்பட்டது. கலை இயக்குநர் மைக்கேல், அவரது குழு தத்ரூபமாக உண்மையான இடம் போலவே செட்டை உருவாக்கினார்கள். இந்த ஆக்‌ஷன் காட்சியை சண்டைப்பயிற்சி இயக்குநர் சில்வா வடிவமைத்தார். அருண் விஜய்யின் ஸ்டைலீஷ் தோற்றமும் பெரும் அர்ப்பணிப்பும் இக்காட்சியை வேறு தளத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. இந்த ஆக்‌ஷன் காட்சியில் அருண் விஜய்யுடன் காளிவெங்கட்டும் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் விரைவில் முடிவடைகிறது’ என்றார்.

இதையும்வாசிங்க: ’அருண்விஜய் 30’ படத்தின் டைட்டிலை வெளியிட்ட 'கைதி'...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.