ETV Bharat / jagte-raho

தரமணியில் தாய், மகள் மரணம்: கணவன் கைது

author img

By

Published : Dec 12, 2020, 7:21 PM IST

murder case
murder case

சென்னை: தரமணியில் கடன் தொல்லை காரணமாக மூத்த மகளை கொலை செய்துவிட்டு, மனைவியை தற்கொலை செய்ய தூண்டிய கணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை கோட்டூர்புரம் பள்ளிப்பட்டு பஜனை கோயில் பகுதியில் கடந்த ஒரு மாதமாக வசித்து வருபவர் கீத கிருஷ்ணன். இவரது மனைவி கல்பனா (36). இவர், தனியார் கல்லூரியில் துணை பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கீத கிருஷ்ணன் வீடு திறக்கப்படாமல் இருந்தது. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் கடந்த 9ஆம் தேதி வீட்டின் உரிமையாளர் தண்டபாணி கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தாய் கல்பனா தூக்கில் தொங்கிய படி சடலமாக அழுகிய நிலையிலும், மூத்த மகள் குனாளினி (13) இறந்தும் கிடந்தனர்.

இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே வீட்டிலிருந்த இரு கடிதங்களை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில், கோதண்டபானி, சந்திரசேகர் ஆகியோர் லோன் வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும், தங்களது மரணத்திற்கு இவர்கள் தான் காரணம் என எழுதியிருந்தது.

தொடர்ந்து, கோட்டூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து கோதண்டபானி, சந்திரசேகரன் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், கல்பனாவின் உறவினர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கல்பனா, அவரது கணவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், அதிகளவில் பணம் கேட்டு பலமுறை கல்பனாவை துன்புறுத்தியதாகவும் தெரிவித்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய கணவர் கீதா கிருஷ்ணன், அவரது இளைய மகள் மானசா ஆகியோர் காணவில்லை என தேடி வந்த நிலையில் கோட்டூர்புரம் காவல்துறையினர் கோயம்பேடு அருகில் கீதா கிருஷ்ணனை மடக்கிப் பிடித்து, அவரது இளைய மகள் மானசாவை மீட்டனர்.

கணவர் கீதா கிருஷ்ணனிடம் நடத்திய விசாரணையில், அதிக அளவிலான கடன் வாங்கியதால், கடனை திருப்பி செலுத்துவதற்காக லோன் அப்ளை செய்ததாகவும் கடைசி நேரத்தில் லோன் கிடைக்காமல் போனது. இதனால் கடன் பெற்றவர்கள் தொந்தரவு கொடுத்ததால் வேறு வழியில்லாமல் கடந்த 3ஆம் தேதி குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, பின்னர் முதலில் மூத்த மகளின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, மனைவி கல்பனாவை தற்கொலை செய்துகொள்ள வைத்ததாகவும், இளைய மகள் மானசாவை கொல்ல மனமில்லாமல் தானும் இளைய மகளும் தப்பி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கு நன்றி - ரஜினி அறிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.