ETV Bharat / entertainment

த்ரிஷா உள்பட மூவர் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க உள்ளதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 11:39 AM IST

நடிகர் மன்சூர் அலிகான் அறிவிப்பு
குஷ்பு திரிஷா சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க உள்ளேன்

defamation case against Trisha Kushboo: குஷ்பு, திரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான மன்சூர் அலிகான், சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், மன்சூர் அலிகான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து “மன்சூர் அலிகான் பெண்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளார். இனி அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன். இதுவரை நடிக்காததை நினைத்து நிம்மதி அடைகிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து, நடிகரான மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகை குஷ்பூ, சிரஞ்சீவி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். ஆனால், தான் எதுவும் தவறாகப் பேசவில்லை என மன்சூர் அலிகான் விளக்கம் அளித்தார். இதனிடையே தேசிய மகளிர் ஆணையம் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு புகார் கடிதம் அனுப்பியது.

இதனையடுத்து, மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். இதனைத் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் தலைமறைவாகி உள்ளார் என தகவல் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து ஆடியோ ஒன்றை அவர் வெளியிட்டார். பின்னர் நவ.23 அன்று, மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

இதையும் படிங்க: "தவறு செய்வது மனிதம்.. மன்னிப்பது தெய்வீகம்" - நடிகை த்ரிஷா ட்வீட்!

இந்நிலையில் மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், "எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு" என கூறியிருந்தார். இதனையடுத்து, நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் "தவறு செய்வது மனித குணம், மன்னிப்பது தெய்வ குணம்" என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது குஷ்பு, த்ரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு, நஷ்டஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் சூட், திட்டமிட்டு கலவரம் உண்டுபடுத்தியது, பொது அமைதியை 10 நாட்களாக கெடுத்து மடைமாற்றம் செய்யத் தூண்டியது ஆகிய அனைத்து பிரிவுகளின் கீழும் வழக்கு தொடர உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

நாளை தனது வழக்கறிஞர் குரு தனஞ்செயன் மூலம் வழக்கை கோர்ட்டில் தொடுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், இது குறித்து அவர் கூறுகையில், “நவ.11 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் நான் பேசிய 'உண்மை வீடியோவை' தங்களுக்கு அனுப்பி உள்ளேன். இந்த வீடியோவைத்தான், சரியாக ஒருவாரம் கழித்து, நவ.19 அன்று சில விஷமிகளால் நான் பேசியவற்றில் முன்னே பின்னே எடிட் செய்யப்பட்டு, த்ரிஷாவை ஆபாசமாகப் பேசியதாக சித்தரிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உண்மை வீடியோவை அனுப்பி உள்ளதாக கூறிய அவர், மேலும் சில ஆதாரங்களுடன் நாளை வழக்கு தொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகை குஷ்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு! காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.