ETV Bharat / entertainment

பா.இரஞ்சித்தின் 10 ஆண்டுகள், புதுப்பாய்ச்சல் தந்த தமிழ் திரை ஆளுமை

author img

By

Published : Aug 14, 2022, 7:08 PM IST

பா.இரஞ்சித்தின் 10 ஆண்டுகள் : புதுப் பாய்ச்சல் தமிழ் திரை ஆளுமை
பா.இரஞ்சித்தின் 10 ஆண்டுகள் : புதுப் பாய்ச்சல் தமிழ் திரை ஆளுமை

இயக்குநர் பா. இரஞ்சித் திரையுலகில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த பத்து ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய பெரும் திரை ஆளுமையான பா.இரஞ்சித்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

'பா.இரஞ்சித்', இந்த ஒற்றைப்பெயர் கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பெயராக மாறியுள்ளது. தமிழ்த்திரை உலகின் பாதையை மாற்றியவர் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவை பா.இரஞ்சித்துக்கு முன் பா.இரஞ்சித்துக்குப்பின் என்று பிரிக்கலாம்.

நூற்றாண்டு கால தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் தங்களது சிறந்த படைப்புகள் மூலம் தங்களது இருப்பை பதியவைத்துச்சென்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு எல்லாம் இல்லாத கிடைக்காத தனியிடம் பா.இரஞ்சித்துக்கு உண்டு. மேல்தட்டு மனிதர்களையே கதைமாந்தர்களாக காட்டப்பட்டு வந்த தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்டவர்களையும் விளிம்புநிலை மனிதர்களையும் கதைமாந்தர்களாக்கிய பெருமை பா.இரஞ்சித்தையே சேரும்.

விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை அவர்களது வாழ்வியலை திரையில் யதார்த்த சினிமாவாக காட்சிப்படுத்தியவர். சென்னையின் புறநகர்ப்பகுதியில் பிறந்து, கவின் கலை கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் பயின்றவர். ஏராளமான இயக்குநர்களிடம் உதவி இயக்குநர் வாய்ப்புக்கேட்டு கிடைக்காமல் திரும்பி, பின்னர் இயக்குநர் வெங்கட்பிரபுவின் ’சென்னை-600028’ படத்தில் உதவி இயக்குநராய் சேர்ந்தது என்று ரஞ்சித் கடந்து வந்த பாதைகள் கரடு முரடானவை.

வெங்கட் பிரபுவிடம் சென்னை-28, சரோஜா, கோவா என்று மூன்று படங்களில் உதவி இயக்குநராய் இருந்தார், பா.இரஞ்சித். சென்னை-28 படத்திலும் சிறு‌வேடத்தில் தலைகாட்டினார். இவரது முதல் படமான அட்டக்கத்தி 2012ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியானது. அதுவரையில் தமிழ் சினிமாவில் காட்டப்பட்டு வந்த நாயக பிம்பத்தை சுக்குநூறாக உடைத்தெறிந்தார். ஒடுக்கப்பட்ட இனத்தைச்சேர்ந்தவரை நாயகனாக்கினார்.

அதுவரையில் மேல்தட்டு மனிதர்களின்கீழ் அடியாளாக, பண்ணையில் வேலை செய்யும் மனிதனாக மட்டுமே விளிம்புநிலை மக்களை காட்டி வந்தனர். நிலச்சுவான்தார்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் கைக்கட்டி கும்பிடுபோடும் மனிதர்களாகவே வந்துபோகும் இவர்களின் ஒருவனை நாயகனாக்குவது என்பது சாதாரண விஷயமல்ல.

ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை, சந்தோஷம், காதல், குடும்பம், கொண்டாட்டம், திருவிழா என அப்படத்தில் காட்டப்பட்ட அத்தனையும் நூற்றாண்டு சினிமா இதுவரையில் காணாதது. ஆதரவற்றவராகவும் எஜமானர்களுக்கு கீழ்படிந்து வாழ்பவராகவும் இதுவரையில் இருந்தவர்கள் இவருடைய திரைப்படங்களில் கதை மாந்தர்கள் ஆனார்கள்.

சமூக அநீதி மற்றும் சாதிய அமைப்பினால் ஏற்படும் சமத்துவமின்மை பற்றி விவாதிக்க புதிய வெளிகளைத் திறந்தன, பா‌.இரஞ்சித் படங்கள். மேலும், அவருடைய படங்கள் பரந்த பார்வையாளர்களை வளர்த்து, சாதிய சமூகத்தின் தீமைகளைப் பற்றி பேசும் திரைப்படங்களுக்கு ஒரு பெரிய சந்தையை உருவாக்கியது.

'அட்டக்கத்தி' அடுத்து இவர் இயக்கிய 'மெட்ராஸ்' திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. சென்னையின் பூர்வகுடிகள் வாழும் பகுதியில் ஒரு சுவரை வைத்து நடக்கும் அரசியலை அப்பட்டமாக தோலுரித்து காட்டினார்.

'மெட்ராஸ்' யாருக்கானது என்பதையும் வடசென்னை பற்றி இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்பட்டு வந்ததை மாற்றியமைத்தார். பூர்வகுடிகள் எப்படி அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் ’மெட்ராஸ்’ படத்தில் காட்டியிருந்தார். அதுமட்டுமின்றி ஒடுக்கப்பட்டவர்களுக்கு படிப்பு எவ்வாறு முக்கியமானது என்பதையும் அவரது படங்களில் தொடர்ந்து காட்சிப்படுத்தியிருந்தார்.

தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எப்போதும் இடம் இருந்ததில்லை. அப்படி இருந்தாலும் அவை நியாயமானதாக இருந்ததில்லை. அதனை மாற்றியவர் பா.இரஞ்சித். அதுவும் தனது கருத்துகளை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களை வைத்தே பேச வைத்தார். சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த்தை வைத்தே 'கபாலி', 'காலா' என்ற இரண்டு படங்களை இயக்கினார்.

ஒரு ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கான நாயகனாக சூப்பர் ஸ்டார் நடிப்பதெல்லாம் தமிழ் சினிமாவில் இதுவரை நடந்திராதது. அதனை நடத்திக்காட்டினார் பா.இரஞ்சித். கபாலி படத்தில் ரஜினியை வைத்து ரஞ்சித் பேசவைத்த சாதி எதிர்ப்பு வசனங்கள் தீப்பொறியாய் கிளம்பின. தோட்டத்தொழிலாளர்களாக மலேசியாவிற்கு அழைத்துச்செல்லப்பட்ட தமிழர்களின் இன்றைய அரசியல் பொருளாதார நிலைகளை ’’கபாலி’’ படம் காட்டியது.

கபாலி பெருவெற்றி பெற்றது. காலாவில் மீண்டும் ரஜினியை இயக்கினார், பா.இரஞ்சித். மும்பை தாராவியில் வசிக்கும் தமிழர்களை மையப்படுத்தி இப்படத்தை எடுத்தார். இதுவும் ரஜினிக்கு பெயர் பெற்றுக்கொடுத்தது. பொதுவாகவே, ஆன்மிக அரசியல் பேசும் ரஜினியை வைத்தே காவி அரசியலை கிழித்துத் தொங்கவிட்டார்.

தனி ஆளாக சினிமாவில் நுழைந்த பா.இரஞ்சித்தின் பட்டறையில் இருந்து இன்று ஏராளமான புதிய இயக்குநர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக பா.இரஞ்சித் உருவாகியுள்ளார். இயக்குநர் மட்டுமின்றி தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் தரமான படங்களையும் தயாரித்து புதிய இயக்குநர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.

தமிழைத் தொடர்ந்து தற்போது இந்தியிலும் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். தான் ஒடுக்கப்பட்டவன் என்று பொதுவெளியில் கூறத் தயங்கியவர்கள் மத்தியில் ஆம்; நான் பட்டியலினத்தவன் தான் என்று வெளிப்படையாகக் கூறி இதிலும் ஒரு புரட்சியை உருவாக்கியவர்.

பா.இஞ்சித் குறித்து பத்திரிகையாளரும் திரைப்பட விமர்சகருமான பரத் கூறியதாவது, “அட்டகத்தி வெளியீட்டு சமயத்தில் இப்படம் வெற்றிபெறுமா என்று எங்களிடம் கேட்ட காலத்தில் இருந்து பா.இரஞ்சித்தை எனக்குத் தெரியும். அடுத்து மெட்ராஸ் என்ற கணமான படத்தை இயக்கியவர். தமிழ் சினிமா பேசாத பலவற்றைப் பேசியவர்.

இதன் கட்டமைப்பில் காட்டப்படாதவற்றை தைரியமாக காட்டியவர். அதனை ’ஆர்ட்’ படங்களாக செய்யாமல் கமர்ஷியல் படம் மூலமாக இதனை சொன்னவர். இந்த வித்தை ரஞ்சித்துக்கு கைவந்த கலை. கபாலி, காலா படத்திற்குப் பிறகு அது மேலும் வலுவடைந்தது. இவரைத்தொடர்ந்து இவரது உதவியாளர்களுக்கும் சமூகம் சார்ந்து கேள்வி கேட்கும் படங்களை எடுக்க உதவியாக உள்ளார்.

சினிமாவை தற்போது இரண்டு பிரிவினர்களாக பிரித்துவிட்டனர். சாதி ரீதியாக பிரிய பா.இரஞ்சித் போன்றவர்கள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. இவரது வருகைக்கு முன் பத்தோடு பதினொன்றாக இருந்த ஒடுக்கப்பட்ட பிரிவினர்களின் படங்கள் இவருக்கு பிறகு அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கியுள்ளன.

பா.இரஞ்சித் இல்லாமல் இனி தமிழ் சினிமாவை எழுத முடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார். இவரைத் தொடர்ந்து வருபவர்களும் இதன் பாதையை பின்தொடர்ந்து சமூக அவலங்களை இதுவரை பேச தயங்கிய விஷயங்களை வெளிப்படையாக பேசி வருகின்றனர். இதற்கு எல்லாம் பாதை அமைத்தவர் பா.இரஞ்சித் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை” என்றார்.

இதையும் படிங்க: சிம்பு திருந்திட்டாருங்க... வதந்திகளை பரப்பாதீங்கா...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.