தமிழ் சினிமாவில் 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். அதன் பிறகு காதல் கொண்டேன், திருடா திருடி, யாரடி நீ மோகினி என வெற்றிப்படங்களின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆரம்பத்தில் இவரது உருவத்தை வைத்து பலரும் கிண்டல் செய்தனர். ஆனால், தனது அபார நடிப்புத் திறனால் ஹாலிவுட் வரை சென்று விட்டார்.
இவரது படங்கள் திரையரங்குகளில் வெளியானால் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிடுவர். சமீபகாலமாக இவர் நடித்து ஓடிடியில் வெளியான படங்கள் போதிய வரவேற்பு பெறவில்லை. கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து ஓடிடியில் வெளியான ’மாறன்’ திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது.
அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ’ஜகமே தந்திரம்’ படமும் ஓடிடியில் வெளியாகி மண்ணைக் கவ்வியது. ஆனால் சமீப காலமாக திரையரங்குகளில் வெளியாகும் தனுஷ் படங்கள் சத்தமின்றி பெரும் வெற்றியை பெற்று வருகின்றன.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் அசுரன். பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் 2019ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகும் போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது.
அதனால் படம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதோடு தனுஷுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது.
பின்னர் மீண்டும் கலைப்புலி தானு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கொடியங்குளம் சம்பவத்தை தழுவி கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘கர்ணன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அதே போல் சமீபத்தில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ’திருச்சிற்றம்பலம்’ . இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஆனால், இப்படத்திற்கு சன் பிக்சர்ஸ் போதிய விளம்பரம் செய்யவில்லை. இதனால் சன் பிக்சர்ஸ் மீது தனுஷ் கோபத்தில் இருந்தார் எனவும் கூறப்படுகிறது.
ஒரே ஒரு ஆடியோ வெளியீட்டு விழா மட்டுமே நடத்தப்பட்டது. இருப்பினும் இப்படம் வெளியாகி யாருமே எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது. ஓடிடியில் வெளியான தனது படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால் மனதளவில் வருத்தத்தில் இருந்த தனுஷுக்கு திருச்சிற்றம்பலம் வெற்றி கொஞ்சம் மனநிம்மதியை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
இப்படி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான தனுஷ் படங்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் கொஞ்சம் விளம்பரங்களுடன் வெளியானாலும் மற்ற இடங்களில் எந்தவித சலசலப்பும் இன்றி வெளியாகின. ஆனால், மிகப் பெரிய வெற்றியை கொடுத்துள்ளன.
அந்த வரிசையில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் ’நானே வருவேன்’. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். வழக்கம் போல் இப்படமும் போதிய விளம்பரம் இன்றி தான் வெளியாகிறது.
காரணம் அடுத்த நாள் மணிரத்னம் இயக்கத்தில் அவரது கனவுப் படமான ’பொன்னியின் செல்வன்’ வெளியாகிறது. இப்படத்திற்காக படக்குழுவினர் அனைவரும் இந்தியா முழுவதும் சுற்றி வருகின்றனர். ஆனால் நானே வருவேன் படத்திற்கு எந்தவித விளம்பரமும் செய்யப்படவில்லை.
ஆனாலும் செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்தாலே அப்படத்திற்கு விளம்பரமே தேவையில்லை என்கின்றனர் ரசிகர்கள். இப்படம் மீண்டும் ஒரு வெற்றியை தனுஷுக்கு கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இதுமட்டுமின்றி தனுஷ் அடுத்தபடியாக செல்வராகவன் நடித்த ’சாணிக்காயிதம்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ’கேப்டன் மில்லர்’ எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தந்தை மகள் பாசத்தை பாடும் ’பிஞ்சு பிஞ்சு மழை’; வெளியானது 'நானே வருவேன்' மூன்றாவது பாடல்