ETV Bharat / entertainment

காஃபி வித் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

author img

By

Published : Sep 27, 2022, 2:27 PM IST

காஃபி வித் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
காஃபி வித் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் காஃபி வித் காதல் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியாகியுள்ளது.

சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா ஷர்மா, ரைசா வில்சன், அம்ரிதா, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, திவ்யாதர்ஷினி நடித்துள்ள படம் 'காஃபி வித் காதல்'. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு, நடிகர்கள் ஜீவா, ஜெய், நடிகைகள் மாளவிகா ஷர்மா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, அம்ரிதா, சம்யுக்தா, திவ்யதர்ஷினி, பாடலாசிரியர் சினேகன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய சுந்தர் சி,"என்னுடைய படத்தின் விழாவுக்கு எப்போதுமே சிறப்பு விருந்தினர்கள் அழைத்ததில்லை. படத்தின் குழுதான் விருந்தினர்கள். இந்த காஃபி வித் காதல் படம் காதல், காமெடி, ஆக்‌ஷன் என எல்லாம் கலந்த படம் என சொல்ல ஆசைதான். ஆனால் இப்போதே படத்தை பற்றி அதிகமாக பேச வேண்டாம் என நினைக்கிறேன்.

காஃபி வித் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
காஃபி வித் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

எனக்கு எப்போதும் ஒரு ஃபீல் குட் படம் இயக்க வேண்டும் என விருப்பம். உள்ளத்தை அள்ளித்தா படத்தைத் துவங்கிய போது ஒரு ஃபீல் குட் படமாக தான் துவங்கினேன். இளையராஜா இசைக்குழுவில் வயலின் வாசிக்கும் ஹீரோயின், அவளை காதலிக்கும் ஹீரோ என தான் கதை இருந்தது.

ஆனால் படத்தின் தயாரிப்பாளர் அப்போது முன்னணி நடிகையாக இருந்த நக்மாவை தான் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு ஏற்றது மாதிரி கதையைப் பிடிக்க, அது காமெடிப் படமாக மாறிவிட்டது. அதன் பிறகு `தீயா வேலை செய்யணும் குமாரு’ படம் துவங்கிய பொழுதும் ஒரு ஃபீல் குட் படம் இயக்க வேண்டும் என தான் துவங்கினேன். ஆனால் படத்திற்குள் சந்தானம் வந்த பிறகு, அதனுடைய கதையையும் காமெடியாக மாற்ற வேண்டி வந்தது.

காஃபி வித் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் சுந்தர் சி
காஃபி வித் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் சுந்தர் சி

ஆனால் இந்த முறை கண்டிப்பாக நான் விரும்பிய படத்தை விரும்பிய மாதிரியே எடுக்க நினைத்து முடித்திருக்கிறேன். படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள். எட்டு பாடல்கள் இருக்கிறது என்றால் அதை யுவன் இசையமைத்தால் தான் நன்றாக இருக்கும் என அவரிடம் சென்றேன். நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

இந்த மாதிரி ஒரு கதைக்கு விஷுவல்ஸ் மிக முக்கியம். அதற்காக ஊட்டி சென்றோம். அதுவும் படத்தில் ஒரு கதாபாத்திரம் போல இடம் பிடித்திருக்கிறது.

காஃபி வித் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகைகள் ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, மாளவிகா
காஃபி வித் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகைகள் ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, மாளவிகா

இது ஒரு அருமையான பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. மூன்று சகோதரர்கள், மூவரும் ஒவ்வொரு விதம். அந்த மூவரின் வாழ்வில் காதல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். அதை எப்படி கையாள்கிறார்கள் என்பதே படத்தின் கதை. படத்தில் மொத்தம் ஆறு ஹீரோயின்கள், அவர்கள் தான் கதையை நகர்த்திச் செல்வார்கள். இதில் யோகிபாபுவுக்கு ஒரு ஸ்டைலிஷான ரோல் கொடுத்திருக்கிறேன்.

பொதுவாக இந்த மாதிரி விழாக்களில் படத்தில் நடித்தவர்கள் பற்றி புகழ்ந்து சொல்வார்கள், ஒரு மாற்றத்திற்கு நான் ஒவ்வொருவரைப் பற்றியும் நெகட்டிவான விஷயங்களை சொல்கிறேன். சம்யுக்தா ஒரு நல்ல நடிகைதான். நான் எவ்வளவோ நடிகைகளுடன் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் சம்யுக்தா போன்று யாரும் பார்த்ததில்லை. ஏனென்றால், அவரை கண் சிமிட்டாமல் நடிக்க வைப்பது மிகப்பெரிய போராட்டம். ஒரே ஒரு காட்சியில் அவர் கண் சிமிட்டாமல் நடிக்க வைக்க ஒன்றரை மணி நேரம் கஷ்டப்பட்டோம்.

காஃபி வித் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை ரைசா வில்சன்
காஃபி வித் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை ரைசா வில்சன்

ரைசாவுடன் பணியாற்றியது, கார்த்திக் சாருடன் வேலை பார்த்த மாதிரி இருந்தது. எப்போது செட்டை விட்டு கிளம்புவார் என்றே தெரியாது. செட்டுக்கு வந்தால் ஏதோ அட்ரஸ் கேட்க வந்த ஆள் போல தான் இருப்பார். ஆனால் நடிக்க ஆரம்பித்தால், சிறப்பாக நடிப்பார். அம்ரிதா, எப்போதும் ஒரு சந்தேகத்தோடே இருப்பார். நம்மை விட மற்றவர்களுக்கு அதிக காட்சிகள் எடுக்கப்படுகிறதா என்று.

காஃபி வித் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா
காஃபி வித் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

மாளவிகா, பொதுவாக ஒரு ஆக்‌ஷன் படத்தில் ஹீரோவுக்கு அடி படுவதை விட, இந்த ரொமான்டிக் படத்தில் ஹீரோயினுக்கு அடி பட்டிருப்பது, மாளவிகாவுக்கு தான். ஒரு நாள் ஐ லைனரை கண்ணில் பட்டு கண்ணில் வீக்கத்தோடு வருவார். ஹீட்டர் சூடு பட்டு கையில் கொப்பளத்துடன் வருவார். மிக சிரமப்பட்டு நடித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா, ஒரு நடிகையிடம் இவ்வளவு எனர்ஜியா என குஷ்புவுக்குப் பிறகு நான் பார்த்து வியந்த நடிகை இவர் தான். பாடல் காட்சி எல்லாம் வந்து விட்டால் இவர் மட்டும் தனியாக ஆடிக் கொண்டிருப்பார். திவ்ய தர்ஷினி, இந்தப் படம் கதையாக தோன்றியதில் இருந்து நிறைய நடிகர்களை மாற்றினோம். ஆனால் துவக்கம் முதல் இறுதிவரை திவ்ய தர்ஷினி நடித்த பாத்திரத்திற்கு அவரைத் தவிர வேறு யாரையும் யோசிக்கவில்லை. படத்தில் எல்லா கதாபாத்திரங்களையும் இணைக்கும் ரோல்.

காஃபி வித் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ஜீவா
காஃபி வித் காதல் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ஜீவா

குழந்தை ரித்தி, இந்தப் படத்தின் ஹீரோ ஹீரோயினை முடிவு செய்வதை விட அதிகம் கஷ்டப்பட்டது இந்த குழந்தையின் ரோலுக்கு தான். இன்ஸ்டாவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஜீவா, ஜெய் பற்றி சொல்வதென்றால் என்னுடைய குடும்பத்து நபர்கள் பற்றி நானே பேசுவது போல் இருக்கும்.

வின்னர் படத்திற்குப் பிறகு நானும் யுவனும் இணைந்து பணியாற்றுகிறோம். அப்போது எப்படி பழகினாரோ, இப்போதும் அதே அன்பு.” என பேசினார்.

நடிகை ரைசா "இந்தப் படத்தில் நடித்தது ஒரு வேலை மாதிரியே தெரியவில்லை, ஜாலியாக இருந்தது. ஒவ்வொரு காட்சி முடிந்து கட் சொன்னதும், எல்லோரும் பயங்கரமாக சிரிப்போம். அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு பார்ட்டி செய்வது மாதிரியான உணர்வு" என்றார்.

நடிகை அம்ரிதா "முதல்நாள் சுந்தர் சி, சார் பார்த்து ரொம்ப பயந்தேன். சார் ஸ்ட்ரிக்டா என ஜெய் இடம் கூட கேட்டேன். ஏனென்றால் அவ்வளவு பரபரப்பாக இருப்பார். ஆனால் முதல் நாள் முடிந்ததும் அந்த டென்ஷன் போய்விட்டது. மொத்தமாக ஒரு வெகேஷன் போய் வந்தது மாதிரி தான் இருந்தது." என பேசினார்.

நடிகர் ஜெய் "இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் ஒன்லைன் சொல்லும் போது, இது என்னுடைய நிஜ கேரக்டர் மாதிரி இருக்கே எனத் தோன்றியது. ஜீவா உடன் இணைந்து நடிக்கும் ரெண்டாவது படம். ஒரு நடிகரோட சேர்ந்து நடிப்பது போல இருக்காது. அந்த அளவு கம்ஃபர்ட்டாக இருக்கும்." என கூறினார்.

நடிகை டிடி "இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் யாருக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் எல்லாரையும் சேர்ப்பது சுந்தர் சார் தான். அந்த மாதிரி கேரக்டர் தான் எனக்கு இந்தப் படத்தில்." என பேசினார்.

நடிகர் ஜீவா "சுந்தர் சாரின் ஷூட் போல ஒரு ஜாலியான இடத்தைப் பார்க்க முடியாது. இன்னைக்கு என்ன எடுப்பார்கள் என டென்ஷனாக இருந்தால், சுந்தர் சார் வந்ததுமே ஒன்னும் இல்ல இவ்வளவு தான் என்பது போல சொல்லித் தருவார். அவரை தயாரிப்பாளர்களின் இயக்குநர் என சொல்லலாம். எவ்வளவு பெரிய படம் என்றாலும் 45 நாள்தான். அதற்குள் எடுத்தால் தான் வியாபாரமாகவும் அது லாபத்தைத் தரும், நடிக்கும் நடிகர்களுக்கும் ஒரு அலுப்பு வராது. படம் முடியும் போது 100 சதவீத சந்தோஷத்துடன் வெளியே வருவோம்" என்றார்.

நடிகை மாளவிகா "முதல் படமே இவ்வளவு சிறப்பான படம் என்பது மகிழ்ச்சி. தெரியாத ஒரு புது மொழியில் நடிக்கிறோம் என்ற பயம் இருந்தது. ஆனால் படத்தின் டீம் அந்த டென்ஷனைக் குறைந்துவிட்டது.” என பேசினார்.

நடிகை ஐஸ்வர்யா தத், "படத்தின் கதையைக் கூட சரியாக கேட்கவில்லை. சுந்தர் சி, சார் என்றதும் ஓகே சொல்லிவிட்டேன். இந்தப் படத்தின் ரிலீஸூக்கு ஆவலாக காத்திருக்கிறேன். என் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கு நான் சென்னையில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என காட்ட வேண்டும்” என்றார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா "வின்னர் படத்தில் இருந்தே சுந்தர் சாருடன் வேலை பார்ப்பது ஒரு ஜாலியான விஷயம். சில பாடல் கம்போஸ் பண்ண லேட் ஆனாலும், எந்த முக சுளிப்பும் இல்லாமல் காத்திருப்பார். கோபப்படவே மாட்டார்” என்றார்.

பேரரசு "யுவன் மியூசிகில் இதற்கு முன் வல்லவன் படத்தில் அம்மாடி ஆத்தாடி பாடல் எழுதினேன். அது பெரிய ஹிட்டானது, இப்போது இந்தப் படத்தில் தியாகி பாய்ஸ் எழுதியிருக்கிறேன். இதுவும் ஹிட்டாகும். சுந்தர் சார் காலத்துக்கு ஏற்ற மாதிரி தன்னை அப்டேட் செய்து கொள்வார். இயக்குநராக மட்டுமல்ல ஹீரோவாவும் ஜெயித்துள்ளார்.” என்றார்.

பாடலாசிரியர் சினேகன் "சுந்தர் சி சார், உள்ளத்தை அள்ளித்தா, அன்பே சிவம், அருணாச்சலம் என எல்லா மாதிரி படங்களையும் பண்ணக் கூடியவர். அவர் படத்தில் பாடல் எழுத முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. அந்தக் குறையை யுவன் போக்கியிருக்கிறார்.

பாடல் எழுத வேண்டும் என ஒரு இரவு எனக்கு போன் செய்தார் யுவன். மறு நாள் காலை நான் பிக்பாஸ் அல்டிமேட் ஷூட்டிற்கு செல்ல வேண்டி இருந்தது. வழக்கமாக ஒரு பாடலின் சூழலை இயக்குநர் தான் சொல்வார். ஆனால் இந்தப் பாடல் உடனடியாக வேண்டும் என்பதால் யுவனே எனக்கு சொன்னார். இரவு 11 மணிக்கு ட்யூன் வந்தது, 1 மணிக்கு பாடலை எழுதி அனுப்பிவிட்டேன்.” என்றார்.

குஷ்பு "நான் தயாரிப்பாளராக நிற்க காரணம் என் பெட்டர்ஹாஃப் சுந்தர் சி. குடும்பமாக பார்த்து ரசிக்கும் பொழுதுபோக்கு படம் கொடுப்பதே அவரின் நோக்கம். அதை வெற்றிகரமாக செய்தும் வருகிறோம். அதற்கு காரணமும் சுந்தர் சி தான். அவரை நம்பி காசு போடலாம். திரும்ப வந்துடும். தயாரிப்பாளர் நிம்மதியாக தூங்கலாம்.

இந்தப் படத்துக்காக ஊட்டி சென்ற சுந்தர் சி, கடுமையாக ஷூட் செய்தார் என சொல்கிறார்கள். எந்த அளவிற்கு பிஸி என்றால் என்னைக் கூட மறந்துவிட்டார். எங்கள் திருமண நாளுக்கு கூட வரவில்லை. நான் தான் அங்கு சென்று கொண்டாடிவிட்டு வந்தேன். நான் நடித்த ரம்பம்பம் பாடலை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அதில் ஆட என்னைக் கூப்பிடவே இல்லை.

இந்த தருணத்தில் நடிகர் பிரதாப் போத்தன் சாரின் இழப்பை உணர்கிறோம். அவர் அப்பா ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னது சுந்தர் தான். படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் பார்க்கும் போது நீங்களும் உணர்வீர்கள். இந்தப் படத்தை அவரது ஆன்மா ஆசிர்வதிக்கும் என நம்புகிறேன்” எனப் பேசினார்.

இறுதியாக பேசிய படத்தின் இணை தயாரிப்பாளர் ஏ.எஸ்.சண்முகம், “எங்களுக்கு பல மருத்துவமனைகள் உள்ளது. அதில் இந்தப் படத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, அவர்களது குடும்பங்களுக்குமான மருத்துவம் சார்ந்த தேவைகளை இலவசமாக பெறும்படி ஒரு அட்டையை வழங்கியிருக்கிறேன்.

மேலும் அடுத்த மாதம் எங்கள் கல்லூரியில் நடக்கவுள்ள பட்டமளிப்பு விழாவில் இயக்குநர் சுந்தர் சி க்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக முடிவு செய்திருக்கிறோம்.” என்றார்.

இதையும் படிங்க: மேகம் கருக்காதா பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ஜானி மாஸ்டர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.