ETV Bharat / crime

போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.44 கோடி நிலம் அபகரிப்பு - 4 பேர் கைது

author img

By

Published : Sep 28, 2022, 4:07 PM IST

Etv Bharat
Etv Bharat

திருவள்ளூர் அருகே போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.44 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர்: ஆவடி காமராஜா் நகா் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஜான் திமோத்தி (51). இவருக்கு ஆவடி அருகே அயப்பாக்கம், ராஜம்மாள் நகரில் 2ஆயிரத்து 767 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 2ஆயிரத்து 180 சதுர அடியை அயப்பாக்கத்தைச் சோ்ந்த முகுந்தன் (69), நந்தகுமாா் (48), ரகுநாதன் (46), தரணிராஜா (40) ஆகியோர் சோ்ந்து போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஜான் திமோத்தி, ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், முகுந்தன், ரகுநாதன் ஆகியோர் சேர்ந்து 2ஆயிரத்து 180 சதுர அடி நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து, அதனை அவர்களின் அண்ணன் மகன் நந்தகுமார் பெயரில், 2020-ஆம் ஆண்டு அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பாகப் பிரிவினை செய்தது தெரியவந்தது.

பின்னர், அந்த நிலத்தை தரணிராஜா என்பவரின் பெயரில் 2021-ஆம் ஆண்டு விற்பனை செய்துள்ளனர். பின்னர், அந்த நிலத்தை இரண்டாகப் பிரித்து, ஆயிரத்து 90 சதுர அடியை ரகுநாதனின் மனைவி சத்தியாவின் பெயரில் 2021-ஆம் ஆண்டு விற்பனை செய்ததாக அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள ஆயிரத்து 90 சதுரஅடி நிலத்தை தரணிராஜாவுக்கு விற்பனை செய்துள்ளனர். அதில், அவர் வீடு கட்டி வசித்து வருகிறார்.

மேலும், சத்தியா அவருக்கு விற்பனை செய்த இடத்தில் மருத்துவமனை மற்றும் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். சத்தியா பெயரில் உள்ள ஆவணங்களை தனியார் நிதி நிறுவனத்தில் வைத்து, தரணிராஜா ரூ. 5 லட்சம் கடன் பெற்றது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், போலியான ஆவணங்கள் மூலம் குடும்ப உறுப்பினர்களுக்கு பத்திரப்பதிவு செய்து நில மோசடி செய்த முகுந்தன், நந்தகுமாா், ரகுநாதன், தரணிராஜா ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட நிலத்தின் பதிவை ரத்து செய்யவும் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மீண்டும் தமிழ்நாட்டில் நுழைந்த ஈரானிய கொள்ளையர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.