ETV Bharat / city

தமிழ்நாட்டில் விரைவில் 6 புதிய மருத்துவக்கல்லூரி - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

author img

By

Published : Oct 4, 2022, 7:29 PM IST

தமிழ்நாட்டில் விரைவில் 6 புதிய மருத்துவக்கல்லூரி - அமைச்சர் மா சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் விரைவில் 6 புதிய மருத்துவக்கல்லூரி - அமைச்சர் மா சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் விரைவில் 6 புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்: பொன்னையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த மருந்தாளுநரிடம் பாம்பு கடிக்கு மருந்து எடுத்துவரச்சொன்னார்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியன். பாம்பு கடிக்கு மருந்தில்லை, ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்திருந்தது, இதனால் ஆரம்ப சுகாதார நிலையம் முறையாக செயல்படவில்லை எனக் கூறி இரண்டு மருத்துவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.

காட்பாடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அளித்த பேட்டியில், ”பொன்னை அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் சரியாக இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இங்கு பாம்புக்கடிக்கு கூட மருந்துகள் இல்லை. இதனால் நோயாளிகளை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 50 கிலோமீட்டர் தூரம் எடுத்துச்செல்லும் சூழல் உள்ளது. இதனால் வழியிலேயே நோயாளிகள் உயிரிழக்கின்றனர்.

இங்கு வந்த எக்ஸ்ரே கருவி சோளிங்கர் அருகேயுள்ள கொடைக்கல்லுக்கு எடுத்து செல்லப்பட்டதாக கூறுகிறீர்கள். கட்டடமும் பழுதடைந்துள்ளது, இதனை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி, பிரச்னைகள் ஏதும் இன்றி நடைபெற சுகாதாரத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், லாலாப்பேட்டை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தேன். லாலாப்பேட்டை மருத்துவமனையில் இன்னும் ஒரு வார காலத்தில் மூன்று மருத்துவர்கள், ஒரு பல் மருத்துவர் என அனைத்து வசதிகளும் செய்து தரமான மருத்துவமனையாக சுகாதார நிலையம் மாற்றப்படும்.

பின்னர், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகளை வாங்கி வந்து வைக்காமல் உள்ளனர். மருந்தாளுநர் பணியும் காலியாக உள்ளது. இங்குள்ள மருத்துவர்கள் சரியாக செயல்படவில்லை. ஆகையால், அவர்களை பணியிடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பாழடைந்துள்ள கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட திட்ட மதிப்பீடுகளை அனுப்பச்சொல்லியுள்ளோம்.

தமிழ்நாட்டில் புதியதாக மயிலாடுதுறை , திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி போன்ற 6 இடங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க தொடர் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.

ஆய்விற்கு பின் அமைச்சர்கள் அளித்த பேட்டி

தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு அரசு மருத்துவமனைகளில் கிடையாது. 38 மாவட்டங்களிலும் அரசு மருந்து கிடங்குகள் உள்ளது. அங்கிருந்து மருந்துகளை மருத்துவர்கள் பெற்று வருவதில்லை. அதனால் தான் தட்டுபாடு உள்ளது. வேண்டுமானால் அனைத்து மருந்து கிடங்குகளையும் செய்தியாளர்கள் ஆய்வு செய்யலாம்”, என்று கூறினார்.

இதையும் படிங்க: மருத்துவப்படிப்பு இளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு நவம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்படும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.