ETV Bharat / city

'நாம் தமிழரைப் பார்த்து அஞ்சும் திமுக!'

author img

By

Published : Feb 13, 2022, 7:46 PM IST

Updated : Feb 13, 2022, 9:07 PM IST

seeman press meet at tirunelveli
சீமான்

நாம் தமிழர் கட்சியைப் பார்த்து திமுக பயப்படுகிறது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

திருநெல்வேலி: நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் சீமான் தலைமையில் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னதாகச் செய்தியாளரைச் சந்தித்த சீமான், நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்களை நம்பி தேர்தலைச் சந்திப்பதாகவும், அதிகாரத்தில் இருப்பவர்கள்தாம் வெற்றிபெறுவார்கள் என்பது சர்வாதிகாரப் போக்கு எனவும் தெரிவித்தார்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆட்சிக் காலத்தில் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்ததாகச் சொல்லும் சீமான், ஆனால் தற்போது ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகின்றது என்றார். மேலும் அதிமுக ஆட்சியில் நடந்த தேர்தலில் ஆள்கடத்தல் நடக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், "தற்போது திமுக ஆட்சியில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் கடத்தப்படுகிறார்கள். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே கருத்துரிமையை முடக்குகிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது. ஒரு மாநிலத் தேர்தலையே பல கட்டங்களாக நடத்துகிறார்கள்.

ஒரு மாநிலத்தில் பிரச்சினை என்றால் அந்த மாநிலத்தில் ஆட்சி கலையும்பட்சத்தில் அத்தனை இடங்களிலும் தேர்தல் நடத்த முடியுமா? இந்தியாவில் பயன்படுத்தப்படும் வார்த்தை இயந்திரங்களை தயாரிக்கும் ஜப்பானில், வாக்குச்சீட்டில்தான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் அமைப்பு முறையில் சீர்திருத்தம் செய்வதை விட்டுவிட்டு ஒரே நாடு, ஒரே தேர்தல் எனச் சொல்கிறார்கள். பாஜகவை எதிர்த்து திமுக குரல் கொடுத்தால், திமுக குடும்பத்தில் பல நபர்கள் திகார் சிறையில்தான் இருக்க வேண்டும். மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது எனச் சொல்கிறார்கள். ஆனால் மத அடையாளங்களுடன் சட்டப்பேரவை, நாடாளுமன்றத்திற்குச் செல்வது என்ன நியாயம்.

மேற்கு வங்கத்தைப் போல தமிழ்நாட்டின் சட்டப்பேரவையும் முடக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி சொல்வது அவருக்கான ஆசை. பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று நடக்கும் ஆட்சியைக் கலைக்க எந்த முகாந்திரமும் தமிழ்நாட்டில் இல்லை.

தேர்தல் ஆணையத்திற்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் செயல்படுகிறார்கள். பறக்கும் படை அலுவலர்கள் கஷ்டப்பட்ட, பாவப்பட்ட நபர்களிடம் மட்டுமே சோதனையை நடத்துகிறார்கள்.

ஆர்.கே. நகரில் 80 கோடி ரூபாய் கொடுத்தார்கள் என்று சொல்லி தேர்தலை நிறுத்திய தேர்தல் ஆணையம், மீண்டும் தேர்தல் நடந்தபோது புகாருக்கு உள்ளானவரே தேர்தலில் நின்று வெற்றிபெற்றார்.

தேர்தலில் பணம் கொடுத்தால் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடை எனச் சட்டம் கொண்டுவர வேண்டும். நாம் தமிழர் கட்சியைப் பார்த்து திமுக பயப்படுகிறது. அதனால்தான் எங்கள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களைக் கடத்துகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நோ சூடு, நோ சொரணை...! - டி.ஆர். பாலு கலகல

Last Updated :Feb 13, 2022, 9:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.