ETV Bharat / city

அத்துமீறிய மதுபான கடைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை கேள்வி!

author img

By

Published : Nov 24, 2020, 7:40 PM IST

Madurai  High Court
Madurai High Court

தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை மதுபான கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் எத்தனை மதுபானக்கடைகளில் அத்துமீறல் நடந்து வருகிறது. அத்துமீறல்கள் நடந்த எத்தனைக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு தலைமைச் செயலர் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "கும்பகோணம் புதிய ரயில் நிலையம் சாலையில் மசூதி, சர்ச், பள்ளி உள்ளன. இதனால் இந்த பகுதி அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.

தற்போது, இப்பகுதியில் புதிய மதுபான கடை மற்றும் மதுபானம் அருந்தும் கூடம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மதுபான கடை அமைக்கும் இடத்தில் வாகனம் நிறுத்துவதற்கான வசதிகள் எதுவும் இல்லை. இதனால் அப்பகுதியில் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துக்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய மதுபான கடையில் இருந்து, 7 கிலோ மீட்டர் தொலைவில் பள்ளி ஒன்று இருக்கிறடது. எனவே புதிய மதுபான கடை அமைப்பதற்கு அளித்த அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு இன்று(நவ.24) விசாரணைக்கு வந்தது.

அப்போது, இவ்வழக்கில் தமிழக தலைமைச் செயலாளரை எதிர் மனுதாரராக நீதிபதிகள் சேர்த்தனர்.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை மதுபான கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது? இதில் எத்தனை மதுபான கடைகளில் அத்துமீறல் நடைபெற்று வருகிறது? அத்துமீறல்கள் நடைபெற்ற எத்தனை மதுபான கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன? என கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள், இந்தக் கேள்விகளுக்கு, தமிழ்நாடு தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டனர். பின் வழக்கு விசாரணை டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 31 வரை அனுமதி வழங்க வேண்டும்' - பி.ஆர். பாண்டியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.