ETV Bharat / city

அரசு மீது என்ன குற்றம் கண்டுவிட்டீர்கள்- சாட்டை துரைமுருகனுக்கு நீதிபதி கேள்வி!

author img

By

Published : Dec 9, 2021, 2:20 PM IST

சாட்டை துரைமுருகன் கைது
மதுரை நீதி மன்றம்

யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சாட்டை துரைமுருகன் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் சாட்டை துரைமுருகனிடம், ”இனிமேல் அவதுறான கருத்துக்களைப் பரப்ப மாட்டேன்” என உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிகொண்டு பிணை அளித்தது.

இந்நிலையில் சாட்டை துரைமுருகன், நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழி உத்தரவாதத்தை மீறி தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசி வருகிறார், அவர் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட பிணையினை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன், விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் சாட்டை துரைமுருகன் என்பவர் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குறுதிகளையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் மீறி அவதூறாக பேசி வருகிறார் எனக் கூறி அதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

ஆதாரங்களைப் பார்த்த நீதிபதி புகழேந்தி கடும் கோபம் கொண்டு, நீதிமன்றத்திற்கு வழங்கும் உறுதிமொழி பத்திரம் வெறும் பேப்பர் தானே என்று நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தன்னால் முடிந்ததை விட அதிகமாகவே பணியாற்றுகிறார். இதை நீங்கள் பாராட்ட வேண்டாம், ஆனால் மைக் கிடைக்கிறது என்பதற்காக கண்டதையெல்லாம் பேச முடியாது எனக் கடுமையாக எச்சரித்தார்.
மேலும், சாட்டை துரைமுருகன் பேசியதையெல்லாம் கேட்பதற்கு நீதிமன்றத்திற்கு நேரம் கிடையாது, அவர் என்ன பேசியுள்ளார் என்பதை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டுமென அரசு தரப்பிற்கு உத்தரவிட்டார்.

அரசு மீது என்ன குற்றம் கண்டு விட்டீர்கள் என்றும் சாட்டை துரைமுருகனுக்கு நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். பின்னர், அரசு தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்படும் அறிக்கையில் சாட்டை துரைமுருகன் ஒரு வார்த்தை அவதூறாக பேசியிருந்தால் நிச்சயமாக பிணை ரத்து செய்யப்படும் எனச் எச்சரித்து வழக்கை செவ்வாய்கிழமைக்கு (டிச.14) ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் - சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.