ஈரோடு :தாளவாடி மலைப்பகுதியில் டிராக்டர் ஓட்டுநர் ஒருவர் உடலில் காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் இது கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள முதியனூர் அருகில் சாலையோரம் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஆசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆசனூர் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இறந்த கிடந்த நபரின் உடலில் கண் மற்றும் காதுக்குப் பின்புறம் ரத்தக்காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சந்தேகத்திற்கிடமான முறையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த நபர் தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்த சித்தப்பா (வயது 40) என்பதும் இவர் நெய்தாளபுரம் பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தில் டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், சித்தப்பாவிற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்படுவதோடு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தனது மனைவி ராஜியுடன் தகராறு செய்து விட்டு வீட்டை விட்டு வெளியேறியதும், அதன் பின்னர் சித்தப்பா மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சித்தப்பாவின் மனைவி ராஜி ஆசனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடலில் காயங்கள் உள்ளதால் யாராவது அடித்து கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஈரோட்டிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். தாளவாடி மலைப்பகுதியில் டிராக்டர் ஓட்டுநர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ஆலங்குடியில் கோஷ்டி மோதல்; இளைஞர் படுகொலை!