ETV Bharat / city

'நான் காந்தியை மகாத்மா என அழைப்பதில்லை...' - நடிகர் கமல்ஹாசன்

author img

By

Published : Sep 18, 2022, 12:09 PM IST

Etv Bharat
Etv Bharat

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கோயம்புத்தூர்: கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக, மகளிருக்கான மய்யம் விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு கமல்ஹாசன் விருதுகளை வழங்கிப் பாராட்டினார். பின்னர் விழாவில் பேசிய கமல்ஹாசன், 'உலகில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தவர்கள் சாமானியர்கள். எனவே, மாற்றம் நம்மில் இருந்து தொடங்கவேண்டும். நாம் புலம்புவதால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை.

காந்தி வந்தவுடன் நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. பொறுமையாக இருந்து தன் பணியை செய்து முடித்து விடுதலை வாங்கி கொடுத்துவிட்டுப்போனார். பார்வையாளர்கள் அனைவருமே மாற்றத்திற்கான விதைகள்.

இங்கு பீடிகைகளுக்கு நேரமில்லை, அனைவரும் வேலையில் இறங்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்கின்றோம். காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிடுவதில்லை, நான் அவர் சந்ததி என நம்புகின்றேன்.

மகளிர் சாதனையாளர் விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி இருக்கின்றோம். இரண்டு முறை புடவை கட்டி பெண்ணாக படத்தில் நடித்து இருக்கின்றேன். அப்போதே பெண்ணாக பிறந்த இருக்கலாமோ என்று நினைத்திருக்கின்றேன். இவ்வுலகில் பெண் பெருமை படக்கூடிய பிறவி.

மகளிருக்கான மய்யம் விருதுகள் வழங்கும் நிகழ்வு
மகளிருக்கான மய்யம் விருதுகள் வழங்கும் நிகழ்வு

நான் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தை என சொல்கின்றனர். அது தான் இல்லை, தமிழ்நாட்டில் 35 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட பெற்றோரால் பிறந்து, அவர்களில் பிழைக்க வாய்ப்பில்லை என்ற 2000 குழந்தைகளை நானும் தினத்தந்தி அதிபரும் தேர்வு செய்து அதன் தந்தையாக இருக்க 'பெற்றால் தான் பிள்ளையா' என்ற அமைப்பை உருவாக்கினோம்.

பின், அதற்கு மருந்தை கண்டுபிடித்தார்கள். சிறிய விழுக்காடு மரணத்தைத் தவிர, பலர் அதில் பிழைத்து பல்வேறு பணிகளில் இருக்கின்றனர். ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற அமைப்பின் மூலம் அதைச் செய்ய முடிந்தது.

பெண்களுக்கு தமிழ்நாடு அரசு ஊதியம் வழங்க வேண்டும். தாய் நாடு, தாய் மண் என்று சொல்கின்றனர். ஆனால், ஊதியம் வழங்குவதைப் பின்னர் செய்துகொள்ளலாம் என்ற வாக்குறுதி கொடுக்கின்றனர். அது போதாது, வாக்குறுதியை அழுத்தம் கொடுத்து செய்ய வைக்க வேண்டும்.

நாம் நம் வாழ்க்கையில் அரசியல் வேண்டாம் என்று விலகினால், வேறு வழியாக நம் வாழ்க்கையில் அரசியல் நுழையும். நீங்கள் அமைதியாக இருப்பதுதான் பேராபத்து.

ஓட்டையாவது போடுங்கள், ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள், நான் பணம் கொடுக்கமாட்டேன். உங்கள் மதிப்பை விட குறைவான பணம் வாக்குக்கு கொடுக்கின்றனர். அதற்கு உங்களுக்குக் கோபம் வர வேண்டும். ரௌத்திரம் பழக வேண்டும்.

நாட்டுப்புறக்கலைகளில் இளைஞர்கள் இருப்பது பெருமகிழ்ச்சியைக்கொடுக்கின்றது. அடுத்த தலைமுறை ஆடிப்பார்க்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறி இருக்கின்றது. தமிழுக்கு மிக நெருக்கமானவன் நான், கலையைப் பற்றி பேசாமல், அரசியல் பற்றி பேசினால் அது வெறும் மண். கலைதான் என்னுடைய மண்ணின் மனதை உணர்த்தும்.

இன்னும் இடது, வலது என அல்லாடிக்கொண்டு இருக்கின்றனர். வெளிநாடுகளில் இடது, வலது ஆகியவற்றைத்தாண்டி மைய கருத்துக்கு வரத் தொடங்கி இருக்கின்றனர். நான் ஆசியாவின் முதல் மய்ய கருத்தாளன். அனைவரும் மய்யத்திற்கு வாருங்கள். நியாயத்திற்கு வாருங்கள்'' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் முன்னறிவிப்பு இன்றி திடீரென பட்டாசு வெடித்ததால் கமல் சில விநாடிகள் பதற்றமடைந்தார். பின்னர் கூட்டத்தில் இருந்து கிளம்பிச்சென்றார்.

இதையும் படிங்க: இந்த நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற கல்வியிலும் திறமையிலும் சமமான தேர்ச்சி அவசியம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.