ETV Bharat / city

’வெற்றி பெறவே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூறுகிறோம்’ - கே.என்.நேரு

author img

By

Published : Mar 2, 2021, 7:28 PM IST

dmk
dmk

சென்னை: குறுகிய காலத்தில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று ஓட்டு கேட்பது சிரமம் என்பதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துவதாக திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வரும் நேரத்தில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கே.என்.நேரு, "வரும் 7 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டில், அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எப்படி முன்னேற்றத்தை கொண்டு வருவது என்பது குறித்து மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக தான் நடந்தது. அவர்கள் எங்களிடம் எந்த அதிருப்தியும் வெளிப்படுத்தவில்லை. கூட்டணி கட்சிகள் நிறைய உள்ளதால் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய தாமதம் ஏற்படுகிறது. இரண்டு நாட்களில் அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவுபெறும்.

’வெற்றி பெறவே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூறுகிறோம்’ - கே.என்.நேரு

மதிமுகவும், விசிகவும் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது தொடர்பாக, அந்தந்த கட்சித் தலைவர்கள் திமுக தலைவருடன் பேசி முடிவெடுப்பார்கள். புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று ஓட்டு வாங்குவது சிரமம் என்பதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துகிறோம். அதற்கு அவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்" என்று கூறினார்.

தொடர்ந்து, அறுபடை வீடுகளில் 5 வீடுகளில் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது என்றும், எனவே திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல எனவும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

இதையும் படிங்க: பாஜக படுதோல்வி அடையும்! - கார்த்தி சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.