ETV Bharat / city

'நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்கத்தக்கது அல்ல!'

author img

By

Published : Feb 4, 2022, 11:54 AM IST

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியது ஏற்கத்தக்கது அல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்புகளுக்கு கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ‘நீட்’ நடத்துவதிலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021 செப்டம்பர் 13ஆம் நாள் சட்ட முன்வரைவு நிறைவேற்றி, ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.

அதனை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்காமல், நான்கு மாத காலமாக நிறுத்திவைத்திருந்த ஆளுநர் ஆர்.என். ரவி பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறார். கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எதிராக இருப்பதால் நீட் விலக்கு சட்ட முன்வரைவைத் திருப்பி அனுப்பியிருப்பதாக ஆளுநர் குறிப்பிட்டிருப்பது ஏற்கத்தக்கது அல்ல.

மாறுபட்ட நிலைப்பாட்டை தீர்த்துக்கொள்ளலாம்

உண்மையில் நீட் தேர்வு கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற முடியாத நிலையைத்தான் உருவாக்கியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத வகையில் சமூக நீதி குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் என்று ஆளுநர் கூறுவதையும் ஏற்க முடியாது. 2016 மே 2ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நீட் தொடர்பாக அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பது என்ன?

“நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தின் மூலம் பொது நுழைவுத் தேர்வு என்ற ‘நீட்’ நடைமுறைக்கு வருமானால், அதன் விளைவாக மத்திய, மாநில அரசுகளிடையே மாறுபட்ட நிலைப்பாடு வருமானால், அத்தகைய முரண்பாடு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 254இன்படி தீர்த்துக்கொள்ளலாம்.

மீண்டும் சட்ட மசோதாவை நிறைவேற்றுக

எந்த அடிப்படையிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கட்டண ஒழுங்குபடுத்தும் அதிகாரம் ஆகியன மாநில அரசிடமிருந்து கரைந்துபோகவில்லை. மேற்கண்ட தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம்தான் நீட் தேர்வை கட்டாயமாக்கியது என்று தொடர்ந்து கூறப்படுகின்ற கூற்று பொய்யானது என்பது தெளிவாகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு அரசியல் சட்டப்பிரிவு 200 இன்படி மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும். ஆளுநர் திருப்பி அனுப்பினால் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 201இன்படி மாநில சட்டப்பேரவை ஆளுநருக்கு பரிசீலனை செய்யுமாறு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பலாம்.

அவ்வாறு மீண்டும் ஆளுநருக்கு சட்ட முன்வரைவு அனுப்பப்பட்டால், அதனை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பியே ஆக வேண்டும். எனவே தமிழ்நாடு அரசு மீண்டும் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் சட்ட முன்வரைவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இதுதான் நீட் தேர்வை ரத்துசெய்யும் லட்சணமா? - திமுக மீது ஓபிஸ் பாய்ச்சல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.