ETV Bharat / city

’தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு’

author img

By

Published : Sep 13, 2021, 5:51 PM IST

தூத்துக்குடி
தூத்துக்குடி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்றும், கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் சாடியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையில், வழக்கு முடித்து வைத்து உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

தேசிய மனித உரிமைகள் ஆணைய அறிக்கை

இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்.13) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய மனித உரிமைகள் ஆணையம் சீல் வைத்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும், அதை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளதாக மனுதாரர் திபென் தெரிவித்தார். மேலும், அந்த அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரினார்.

உயிரிழந்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு

தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டினர்.

இந்த அறிக்கை நகலை, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞருக்கும், மனுதாரருக்கும் வழங்க மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கையை பொதுவெளியில் வெளியிடக் கூடாது எனவும் அறிவுறுத்தினர்.

அரசில் ஆதிக்கம் செலுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள்

தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு எனக் கூறிய நீதிபதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்களிடம் துப்பாக்கி காட்டக்கூடாது எனவும், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது எனவும், இதுபோல மீண்டும் ஒரு சம்பவம் நடக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர்.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையின்படி, துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவின் விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.