ETV Bharat / city

வங்கிக்கு பணம் எடுத்து செல்லும்போது பாதுகாப்பு இரட்டிப்பு- சைலேந்திர பாபு உத்தரவு

author img

By

Published : Aug 30, 2021, 7:09 PM IST

tn-dgp-sylendra-babu-order-to-doubling-security-when-taking-money-to-the-bank-from-rbi
வங்கிக்கு பணம் எடுத்துச் செல்லும்போது பாதுகாப்பு இரட்டிப்பு- சைலேந்திர பாபு உத்தரவு

ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள வங்கி கிளைகளுக்கு பணம் எடுத்து செல்லும்போது பாதுகாப்பை இரட்டிப்பாக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியின் கருவூலத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளுக்கும் அதன் கிளைகளுக்கும் பணமானது சாலை மார்க்கமாகவும், ரயில்கள் மூலமாகவும் எடுத்து செல்லப்படுகின்றன. இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் பணத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனடிப்படையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், ரிசர்வ் வங்கி கருவூலத்திலிருந்து பணம் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பை இரட்டிப்பாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், மூத்த வங்கி அலுவலர்களின் ஆலோசனைப்படி பணம் வைத்திருக்கும் வங்கி கருவூலங்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கூறியுள்ளார்.

போதுமான பாதுகாப்பு இருக்கிறதா?

இதுதொடர்பாக அண்மையில், தேசிய வங்கிகளின் மூத்த அலுவலர்களோடு நடந்த மாநில அளவிலான பாதுகாப்புக்குழு கூட்டத்தில், பணத்தை எடுத்துச் செல்லும்போது பாதுகாப்புக்கு போடப்படும் காவலர்களுக்கு போதுமான ஆயுதங்கள் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை வங்கி அலுவலர்கள் தரப்பில் முன்வைத்துள்ளனர்.

தேசிய வங்கிகளின் கருவூலங்கள் சென்னையிலும் மற்ற நகரத்திலும் இயங்கி வருகிறது. அந்தக் கருவூலங்களுக்கு முறையான பாதுகாப்பு அளிக்கப்படுகிறதா எனவும் பாதுகாப்பில் ஈடுபடும் காவலர்கள் ஆயுதங்கள் முறையாக வைத்துள்ளார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என உயர் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ரயலில் கொள்ளை

வங்கி கருவூலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் போது அதற்கான பாதுகாப்பு செலவை வங்கிகள் நிலுவைத் தொகை செலுத்தாமல் வைத்திருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சில தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள் 94 லட்சம் ரூபாய் அளவிற்கு நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளதாக காவல் துறை உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று பாதுகாப்பு குறைபாடினால் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சேலத்திலிருந்து சென்னை வரும் ரயில் மூலமாக பணம் எடுத்து செல்லப்படும்போது, ரயிலின் மேற்கூரை துளையிடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை பிடித்து, ஐந்தே முக்கால் கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உணவுக் கழிவிலிருந்து மின்சாரம்: பிரதமர் மோடியின் பாராட்டு மழையில் சிவகங்கை ’காஞ்சிரங்கால்’ கிராம மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.