ETV Bharat / city

“இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” - ஸ்டாலின் கடிதம்

author img

By

Published : Jan 25, 2022, 3:58 PM IST

tn cm Stalin letter
ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து, இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று தமிழ்நாடு மீனவர்கள், கடந்த ஜனவரி 23ஆம் தேதியன்று வேதாரண்யம் கடற்கரையிலிருந்து 16 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 300 கிலோ எடைகொண்ட மீன்பிடி வலை, தொலைத்தொடர்பு சாதனங்கள் (GPS, VHF), 30 லிட்டர் டீசல் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இச்செய்தியை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன், தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அப்பாவி மீனவர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்துவதன்மூலம், தமிழ்நாடு மீனவர்களை, அவர்களது பாரம்பரிய பாக் வளைகுடா மீன்பிடி கடல் பகுதிகளுக்கு வரவிடாமல் தடுப்பதை இலக்காகக் கொண்டு செயல்படுவதையே காண முடிகிறது.

இலங்கையைச் சார்ந்தவர்களால் நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள், நமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் இந்திய அரசு வாய்மூடி மௌனமாக இருத்தல் கூடாது.

தமிழ்நாடு மீனவர்கள் மீது இதுபோன்று தாக்குதல் நடத்தப்படுவதும், அவர்களது உடைமைகளை கொள்ளையடித்து சேதப்படுத்துவதும் போன்ற செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ஓய்வூதியம் பெறுவோருக்கு அகவிலைப்படி உயர்வு- தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.