ETV Bharat / city

திருமழிசை பேரூராட்சி மறைமுக தேர்தல் சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க உத்தரவு

author img

By

Published : Mar 16, 2022, 7:21 AM IST

mch
mch

திருமழிசை பேரூராட்சி மறைமுக தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி தலைவர், துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடந்தது. அன்று திருமழிசை பேரூராட்சியில், மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. ஆனால் அதிமுக உறுப்பினர்களுடைய இருவரது வாக்குகள் செல்லாதவை என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இதனால் ஏழு உறுப்பினர்களுடன் திமுக உறுப்பினர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக உறுப்பினர் ரமேஷ், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாமக உறுப்பினர் ராஜேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து அவர்களது தரப்பில், ஆளும் திமுகவின் உறுப்பினரை வெற்றி பெற செய்வதற்காக அதிமுக உறுப்பினர்கள் இருவரது வாக்குகள் செல்லாதவை என்று தேர்தல் அதிகாரி அறிவித்துவிட்டார்.

இந்த வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்க காரணம் என்ன என்பது குறித்து கேட்டபோது, தேர்தல் அதிகாரியும், மாநில தேர்தல் ஆணையமும் எந்த பதிலளும் அளிக்கவில்லை. எனவே தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவித்தனர். இதனையேற்ற மனுதாரர்கள் வழக்கை திரும்பப் பெறுவதாக கூறி, தேர்தல் வழக்குக்கு ஆதாரமாக உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனையேற்ற நீதிபதிகள், திருமழிசை பேரூராட்சி மறைமுக தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதையும் படிங்க: 6 வாரத்திற்குள் நாவலூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றுவோம் - நீதிமன்றத்தில் அலுவலர்கள் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.