ETV Bharat / city

தேர் விபத்து: தஞ்சாவூர் விரைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Apr 27, 2022, 9:05 AM IST

தஞ்சாவூர் தேர் விபத்து
தஞ்சாவூர் தேர் விபத்து

தஞ்சாவூர் அப்பர் கோயில் தேரோட்ட திருவிழாவின் போது உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தஞ்சாவூருக்கு செல்கிறார்.

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஏப்.27) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர் என்ற துயரமான செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இவ்விபத்தில் 15 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாக அறிகிறேன், அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் விபத்து பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஐந்து லட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: தஞ்சாவூர் தேர் விபத்து - பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.