ETV Bharat / city

மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பாரா ஆளுநர்?

author img

By

Published : Apr 28, 2022, 10:41 AM IST

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களுக்கு ஆளுநர் மாளிகை அனுமதி அளிக்காமல் உள்ள நிலையில், பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நிறைவேற்றப்பட்ட சட்டமசோதாக்களில் முக்கியமானதான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் நிறைவேற்றப்பட்ட சட்டமசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு அவர் அனுப்பாமல் உள்ளார்.

இதனால் ஆளுநர் மாளிகை தமிழ் புத்தாண்டு தினத்தில் முதன் முதலாக அளித்த தேநீர் விருந்தைக்கூட அரசு புறக்கணித்தது. திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் மீது கடுமையான அதிருப்தியை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் மாநிலப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை ஊட்டியில் தன்னிச்சையாக கூட்டி நடத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக்கல்விக் கொள்கையை நிறைவேற்றவும் உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகை

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி 2021 செப்டம்பர் 18ஆம் தேதி பதவியேற்றார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்வதாக தொடர்ந்து தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. அதிமுக, திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு ரத்து உள்பட 8 மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டதால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் விமர்சிக்கும் அளவிற்குத் தள்ளியது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் முக்கியமாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியை தந்தது. அதனை நிறைவேற்றவும், நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது பற்றி ஆராய நீதிபதி ராஜன் குழுவையும் நியமித்தது. அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமியற்றி 2021 செப்டம்பர் மாதம் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால்,அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டார். 142 நாள்களுக்குப் பிறகு மசோதாவில் ஆட்சேபங்கள் இருப்பதாக தமிழ்நாடு சட்டப் பேரவைத்தலைவருக்கு திருப்பி அனுப்பினார்.

ஆளுநருக்கு எதிராக போராட்டம்
ஆளுநருக்கு எதிராக போராட்டம்

இதனால், தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு அமர்வில் நீட் விலக்கு கோரும் மசோதா மீண்டும் விவாதம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. சட்டப்பேரவையில் 2ஆவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆளுநரை சந்தித்து வலியுறுத்திப் பேசினார். ஆனாலும், அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பாமல் காலதாமதம் செய்து வருகிறார். தமிழ்நாடு ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தி தனிநபர் மசோதாவையும் தாக்கல் செய்தது.

மேலும் திமுக ஆட்சி அமைந்தப் பின்னர் தமிழ்நாட்டில் சித்த மருத்துவத்திற்கு தனியாக பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாவில் குறிப்புரை எழுதி அரசுக்கு திரும்ப அனுப்பி வைத்துள்ளார். இந்த மசோதா பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு ஏற்றவகையில் இல்லை. அந்தவகையில் உருவாக்கி மசோதாவை நிறைவேற்ற கூறியுள்ளார். எனவே நடப்பு கூட்டத்தொடரில் மீண்டும் இந்த மசோதா திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனவரி 12 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் சட்டமசோதா , 2021 செப்டம்பர் 20ஆம் தேதி பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் சுயநிதி கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான சட்டமசோதாக்களுக்கும் அனுமதி அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார்.

அதேபோல் அதிமுக ஆட்சியின் போது சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டமசோதாக்களில், 2020 செப்டம்பர் 24 ஆம் தேதி கூட்டுறவு சங்கத்தில் இயக்குநர் குழுவை சஸ்பெண்ட் செய்யப்படும் பட்சத்தில் உடனடியாக நிர்வாக அதிகாரி ஒருவரை பதிவாளர் நியமிக்கும் அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதா, 2020 ஜனவரி 13 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை அரசே நியமிப்பது தொடர்பான மசோதா, மாநில சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று சில சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமசோதா, 2020 ஜனவரி 18 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை தமிழக அரசே நியமிப்பது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட சட்டமசோதா உள்ளிட்ட 8 மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசிற்கும் மோதல் அதிகரித்து வரும் நிலையில் இந்த மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்படுகிறதா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.