ETV Bharat / state

துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்படுகிறதா?

author img

By

Published : Apr 25, 2022, 11:00 PM IST

துணைவேந்தர் நியமனம்
துணைவேந்தர் நியமனம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர்களின் மாநாட்டை தன்னிச்சையாக நடத்தி வரும் நிலையில், அவரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் சட்டப்பேரவையில் துணைவேந்தர் நியமனத்திற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரான நீட் விலக்கு மசோதா விவகாரம், ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தை தமிழ்நாட்டிலுள்ள பெருபான்மையான அரசியல் கட்சிகள் புறக்கணித்த விவகாரம், ஆளுநருக்கு எதிராக மாநிலத்தில் ஆங்காங்கு நடந்த கருப்புக் கொடி ஏந்திய ஆர்ப்பாட்டம், தேசிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு போன்ற பிரச்னைகள் நிலவி வருகின்றன.

இதற்கிடையே தமிழ்நாட்டில் மாநில அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாத நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தப்பின்னர் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலை உள்ளது.

துணைவேந்தர்கள் நியமனம் குறித்த சட்டமுன் வடிவு: திமுகவின் தேர்தல் அறிக்கையிலும், ஆளுநர் உரையிலும் கூறப்பட்டது போல், மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநில அரசு ஓரங்கட்டப்பட்டது இனி நடக்காது: அந்த மசோதா குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றினுடைய வேந்தராக ஆளுநரும், இணை வேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரும் செயல்படக்கூடிய நேரத்தில், கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடிய அரசுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கக்கூடிய அதிகாரம் இல்லாமல் இருப்பது உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மாநில அரசு ஒருபோதும் ஏற்காது: மாநில அரசின், அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலந்து ஆலோசித்து ஆளுநர், துணைவேந்தரை நியமிப்பது மரபாக இருந்து வந்துள்ள நிலையில், அண்மைக் காலமாக இந்த நிலையிலே மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 4ஆண்டுகளில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில், ஆளுநர் தனக்கு மட்டுமே பிரத்யேகமான உரிமை என்பது போல் செயல்பட்டு, உயர்கல்வியை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைத் தூக்கியிருக்கிறது.

பூஞ்சி ஆணையத்தின் பரிந்துரை: "ஒன்றிய-மாநில அரசு உறவுகள் குறித்து ஆராய 2007ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரையில், அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக் கூடாது" என்று பரிந்துரைத்துள்ளது.

தமிழ்நாடு சட்டபேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
தமிழ்நாடு சட்டபேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

அதற்கு பூஞ்சி ஆணையம் சொன்ன காரணங்கள் என்ன தெரியுமா? துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநர்களிடம் இருந்தால், அது சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகும். தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்கள் பூஞ்சி ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாகக் கருத்து தெரிவித்துள்ளது' என்று சுட்டிக்காட்டினார்.

குஜராத் மாநிலத்திலும் இதேபோன்றுதான்: மேலும், பேசிய முதலமைச்சர், 'பிரதமராக இருக்கக்கூடிய மோடி, சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில், தேடுதல் குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை மாநில அரசு நியமிக்கிறது. பிரதமருடைய சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ளதுபோல, தமிழ்நாட்டிலும், தமிழ்நாடு அரசின்கீழ் உள்ள பல்கலைக்கழகத்தின் சட்டங்களில் உரிய திருத்தம் செய்து, பல்கலைக்கழகத் துணை வேந்தரை மாநில அரசே நியமிக்கும்' எனப் பேசினார்.

உயர்கல்வித்துறையில் தலையீடுகள் குறைய வாய்ப்பு: தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது குறித்து அரசியல் கட்சி பிரபலங்கள் கூறிய கருத்துகளைக் காணலாம். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலளார் பாலகிருஷ்ணன், 'பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயல்படும் நிலைமை தொடருமானால், அது உயர்கல்வித்துறையில் தலையீடுகள் தொடர்வதற்கே வழிவகுக்கும்; எனவே, பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயல்படும் ஏற்பாட்டையும் மாற்றி அமைத்திட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

தேவையற்ற குழப்பங்கள் நீங்கும்: இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், 'தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் தேவையற்ற குழப்பங்களைத் தடுக்க துணைவேந்தர்களை அரசே நியமிக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வந்த யோசனை, செயல்திட்டம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' என்று கூறியுள்ளார்.

உடனடியாக ஆளுநர் அனுமதி தரவேண்டும்: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறும்போது, 'தமிழ்நாட்டின், மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. இந்த மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக அனுமதி வழங்கிட வேண்டும்' என்றார்.

ஆளுநரின் பதிலே இறுதி முடிவு: இது குறித்து கல்வியாளர் பாலகுருசாமி கூறும்போது, 'கல்வி நிலையங்களில் அரசியல் தலையீடு இல்லாத நிலை இருக்க வேண்டும். ஆனால் துணைவேந்தர்களை நியமிக்கும் போது அரசியல் தலையீடு இருந்தால், மாணவர்களின் கல்வி பாதிக்கும்' என்று தெரிவித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றப் பட்டாலும் ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே செயல்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிங்க: துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.