சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாகவும், இதனால் பொதுமக்களிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும் பழக்கமும் குறைந்து வருவதாகவும் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ”தமிழ்நாட்டில் படிப்படியாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஜனவரியில் 20 ஆம் தேதி 30 ஆயிரம் என்ற அளவில் உச்சத்தை அடைந்து, அதிகரித்த கரோனா, தற்போது குறைந்து நேற்று (பிப்.06) 6 ஆயிரம் எனப் பதிவாகி உள்ளது.
மேலும் கரோனா குறைந்து கொண்டே வந்தாலும், முகவசம் அணிவதை நிறுத்த கூடாது. மக்கள் கவனக்குறைவாக இருந்தால் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கும். பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் 10 விழுக்காடு என்ற எண்ணிக்கையில் கரோனா உள்ளது.
மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் குறைந்து இருந்தாலும், கேரள எல்லையான கோயம்புத்தூர், தேனி, திருப்பூர் மாவட்டங்களில், ஆந்திரா எல்லையான திருவள்ளூர் மாவட்டம் மற்றும், சுற்றுலா தளம் உள்ள மாவட்டங்களான நீலகிரி போன்ற மாவட்டங்களிலும் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
கரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் 3 சதவீதம் பேர் சாதாரண படுக்கைகள், 6 சதவீதம் பேர் ஆக்சிஜன் படுக்கைகள், ஐசியூ படுக்கையில் 8 விழுக்காட்டினர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மொத்தமாக, தமிழ்நாட்டில் தற்போது 4 விழுக்காடு படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளது.
கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதை குறைக்க தொடங்கி உள்ளதாகவும், மாஸ்க் அணிவது உள்ளிட்ட நடவடிக்கைகளை பொதுமக்கள் அலட்சியமாக எடுத்து கொள்ள கூடாது . அதேபோல் 1 கோடியே 6 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.
புற்றுநோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
கரோனா பாதிப்பிலிருந்து தங்களை காத்து கொள்ள கட்டாயம் முககவசம் அணிந்து தங்களுடைய ஒத்துழைப்பை மக்கள் அளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஜனவரியில் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் ஏழரை லட்சம் பேர் என்கிற நிலையில், தற்போது 4 லட்சத்திற்கும் அதிகாமானோருக்கு தமிழ்நாட்டில் பூஸ்டர் செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காலத்தில் புற்றுநோய் போன்ற இதர நோய்களை பொதுமக்கள் மறந்து விடக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் 2012ஆம் ஆண்டு 53,022 பேருக்கு புற்று நோய் பாதித்தது, இந்நிலை 2021ஆம் ஆண்டு 81,814 ஆக உயர்ந்துள்ளது.
அதில் கடந்த ஆண்டு மட்டும் 55 விழுக்காடு பெண்களும், 45 விழுக்காடு ஆண்களும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஆண்களுக்கு பெரும்பாலும் வாய்புற்று, நுரையீரல், வயிற்று புற்றுநோய் அதிகம் பாதிக்கப்படுகிறது. பெண்களுக்கு அதிகமாக கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்று நோய் அதிகமாக உள்ளது.
இதனால் ஆரம்ப காலத்தில் சிகிச்சைக்கு வந்தால் 75 சதவீதம் வரை குணப்படுத்த முடியும் எனவும்,. தமிழ்நாட்டில் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.200 கோடி மதிப்பில் ஒப்புயிர் மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தொற்று நோய் குறித்த தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இன்னுயிர் காப்போம் திட்டம் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஜனவரியில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு இன்னுயிர் காப்போம் திட்டம் பெரும் பங்கு உண்டு. இத்திட்டத்தின் மூலம், 11,024 பேரும் 84 சதவீதம் பேர் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையில் 2,064 பேரும் என48மணி நேரத்தில் 13,268 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதற்காக 12.61 கோடி நிதியுதவி பெற்றுள்ளனர். 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் 1.06 கோடி பேர் உள்ளது வேதனை அளிக்கிறது. இதனால், தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
இதையும் படிங்க: இந்துத்துவா இந்திய அரசியலமைப்பின் பிரதிபலிப்பே...! - மோகன் பகவத்