ETV Bharat / city

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...!

author img

By

Published : Jan 8, 2021, 5:16 PM IST

Updated : Jan 8, 2021, 7:30 PM IST

pongal special buses announcement
pongal special buses announcement

17:12 January 08

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில், அந்த துறைக்கான செயலர் சமயமூர்த்தி, கூடுதல் தலைமைச் செயலர், போக்குவரத்து ஆணையர் ஜவகர் மற்றும் மேலாண் இயக்குநர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜனவரி 8) ஆலோசனை நடத்தினர். 

இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 11ஆம் தேதி முதல் 13 வரையில் தினசரி இயக்கப்படும் 2,050 பேருந்துகளுடன் 4,078 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து சென்னையிலிருந்து 10,228 பேருந்துகளும், பிற பகுதிகளிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,993 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,221 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, ஜனவரி 17ஆம் தேதி முதல் 19 வரையில் பிற பகுதிகளிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2,050 பேருந்துகளுடன், 3,393 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற பகுதிகளிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 5,727 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 15,270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  

பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை (Toll Free Number) தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும். பேருந்து, வழித்தடம் குறித்த விவரங்களை பயணிகள் அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் பொதுமக்களின் வசதிக்காக, தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், அண்ணாநகர் மேற்கு மாநகரப் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், 
மாநகரப் போக்குவரத்துக் கழக கே.கே. நகர் பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன்". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated :Jan 8, 2021, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.