ETV Bharat / city

'திருநீறை அழிக்க எவ்வளவு நேரம் ஆகும்? ஆராய்ந்து பேசுங்க பொன் ராதாகிருஷ்ணன்!'

author img

By

Published : Feb 21, 2022, 10:14 PM IST

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

மத்தியிலே பொறுப்பில் இருந்த பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது அந்தச் சொல்லுக்குப் பின்னால் இருக்கின்ற விளைவுகளை ஆராய்ந்து பேச வேண்டும் என அறிவுறுத்திய பீட்டர் அல்போன்ஸ், வன்முறையைத் திறந்துவிடுவது எளிது எனவும் எச்சரித்தார்.

விருதுநகர்: தென்காசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் மூத்தத் தலைவரும், தமிழ்நாடு சிறுபான்மை நலத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் பின்னர் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து நான்காண்டுகளாக நடத்த முடியாத உள்ளாட்சித் தேர்தலை ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் நடத்தி முடித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து வேகமாக உள்ளாட்சித் தேர்தல் வந்த காரணத்தினால் பொதுமக்களுக்கு வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்திருக்கலாம்.

வாக்குப்பதிவு குறைவுக்கு அல்போன்ஸ் சொல்லும் காரணம்

ஆனால் அவ்வாறு ஆர்வம் குறைவது நல்லதல்ல. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஆதாரம் தேர்தல்தான். ஆகவே தேர்தலில் மக்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. தேர்தலில் வாக்காளர்கள் பங்களிப்பு குறைந்ததற்கான காரணத்தை அனைவரும் ஆராய வேண்டும்.

அரசு, அரசியல் கட்சியினர் மட்டுமின்றி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்களுக்காகப் பணியாற்றுகின்ற அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என மக்கள் தேர்தலில் ஏன் வாக்களிக்க வரவில்லை என்பதை ஆராய வேண்டும். நல்ல வேட்பாளர்கள் வரவில்லை. அதனால் மக்கள் வாக்களிக்க வரவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

திருநீறை அழிக்க எவ்வளவு நேரம் ஆகும்? ஆராய்ந்து பேசுங்க!

தேர்தலில் போட்டியிடத் தகுதியுள்ள அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். நல்லவர்கள் அரசியலிலிருந்து விலகுவதால்தான் சில நேரங்களில் விரும்பத்தகாத நபர்கள் அந்த இடத்தில் அமர்ந்துவிடுகின்றனர். அரசியல் என்பது புறந்தள்ள கூடியது அல்ல. அரசியல் மூலமாகத்தான் நல்ல அதிகாரத்தைச் செலுத்தும் நல்ல மக்கள் பிரதிநிதிகள் வர முடியும்.

திருநீறை அழிப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

எனவே நல்லவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்குவதற்காகத் தமிழ்நாட்டிலேயே நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். அரசியல் கட்சிகளும் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களின் தகுதியை உயர்த்த வேண்டும்.

ஆகவே அப்படிப்பட்ட சூழலில்தான் மக்களிடம் தேர்தல் மீது நம்பிக்கை வரும். வாக்கு விழுக்காடு குறைந்தது குறித்து நானும் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். பாஜகவைப் பொறுத்தவரை ஹிஜாப் விவகாரம் அதனுடைய நிலைமையைக் காட்டுகிறது, பாரதியார் கூற்றுப்படி பேய் அரசு செய்தால் அங்கே பிணம் தின்னும் சாஸ்திரம்.

இஸ்லாமிய சகோதரிகள் தலையில் துணி அணிந்து கொண்டுவருவது 500 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் பண்பாடு. இதேபோல் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களின் சிலுவை அறுப்பதற்கும், நெற்றியில் உள்ள திருநீறை அழிப்பதற்கும் எவ்வளவு நேரம் ஆகும்? இதேபோல் அனைவரும் புறப்பட்டால் ஒரு அமைதியான சமூகம் கிடைக்காது.

இந்நிலை நமது வீட்டுப் பெண்களுக்கும் வரும்

மத்தியிலே பொறுப்பிலிருந்த பொன் ராதாகிருஷ்ணன் வார்த்தையைச் சொல்லுகின்றபோது அந்த வார்த்தைக்குப் பின்னால் இருக்கின்ற விளைவுகளை ஆராய்ந்து பேச வேண்டும். வன்முறையைத் திறந்துவிடுவது எளிது.

அதை அவர் நியாயப்படுத்தினார் என்றால் எந்தப் பெண்ணும் சாலையில் பாதுகாப்பாகச் சென்றுவர முடியாது. இந்த நிலை நமது வீட்டுப் பெண்களுக்கும் வரும். இதுபோன்ற வன்முறைகளை பாஜக அனுமதிக்கக் கூடாது. எதைச் செய்ய வேண்டும் என்ற வரைமுறைக்குள் பாஜக வர வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கையின்போது முகத்திரை அணிந்துகொண்டு சென்றால் ஏற்றுக்கொள்வார்களா? - பொன். ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.