கந்துவட்டி கொடுமை - காவல் ஆணையர் அலுவலகத்தில் மூதாட்டி ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Aug 18, 2021, 10:12 PM IST

கந்துவட்டி கொடுமை

கந்துவட்டிக் கொடுமையிலிருந்து காப்பாற்றி, வீட்டு மனையை மீட்டு தரக்கோரி மூதாட்டி ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சென்னை: திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி (69). இவர், வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக மூன்றாவது கேட் அருகே பதாகை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கந்து வட்டியில் இருந்து தன்னை காப்பாற்றி தனது மனையை மீட்டு தரவேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

ஏமாற்றம்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சாந்தகுமாரி, “2011ஆம் ஆண்டு உமாபதி என்பவரிடம் தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, மாத வட்டி செலுத்தி வந்தேன். எனது மகள் 2016ஆம் ஆண்டு இறந்த பிறகு வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வட்டித் தொகை மட்டுமே செலுத்த வேண்டும் என உமாபதி தெரிவித்து அதற்கும் பணம் கொடுத்ததுபோல பத்திரப்பதிவு செய்து தன்னை ஏமாற்றி கையொப்பம் பெற்றுக்கொண்டார். 2017ஆம் ஆண்டு மொத்தம் 5 லட்சம் கொடுத்தால் பத்திரப்பதிவை ரத்து செய்வதாக உமாபதி கூறினார்.

உமாபதி
உமாபதி

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இதனால் நான் மோசமடைந்ததை உணர்ந்து இது குறித்து ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அப்போது உமாபதி 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பத்திரப்பதிவை ரத்து செய்வதாக ஒப்புக்கொண்டார். சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை கடனை திருப்பி செலுத்தியும் உமாபதி பத்திரப்பதிவு ரத்து செய்யாமல் 10 லட்சம் ரூபாய் வரை கேட்டு தொல்லை கொடுத்து வருகிறார்.

வட்டி தரமுடியாது என உமாபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். எனவே கந்து வட்டி அதிகமாக பெறும் உமாபதி மீது நடவடிக்கை எடுத்து எனது வீட்டு மனையை மீட்டுக் கொடுக்க வேண்டும்” என மூதாட்டி தெரிவித்தார்.

இதையும் படிங்க: கந்து வட்டி கொடுமை - 10 பேர் தீக்குளிக்க முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.