ETV Bharat / state

கந்து வட்டி கொடுமை - 10 பேர் தீக்குளிக்க முயற்சி

author img

By

Published : Jul 29, 2021, 7:17 AM IST

தற்கொலைக்கு முயன்ற பாதிக்கப்பட்டவர்கள்
தற்கொலைக்கு முயன்ற பாதிக்கப்பட்டவர்கள்

கந்துவட்டி வசூலிப்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 10க்கும் மேற்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலக வாசலில் தீக்குளிக்க முயன்றனர்.

சென்னை: வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் 3ஆவது எண் கொண்ட கேட் வழியாக பொதுமக்கள் வந்து புகார் கொடுப்பது வழக்கம். எப்போதுமே பரபரப்பாக இயங்கி வரும் காவல் ஆணையரக வாசலில் திடீரென பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றனர்.

இதனைக் கண்ட பாதுகாப்பு பிரிவு காவலர்கள் உடனடியாக அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். இதனைத் தொடர்ந்து தீக்குளிக்க முயன்றவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அனைவரும் சூளைமேடு காமராஜர் பகுதியில் பாய் விற்கும் வியாபாரிகள் என்பது தெரியவந்தது.

மேலும், கடன் தொல்லை காரணமாகவும், கடன் கொடுத்தவர் வட்டி கேட்டு மிரட்டல் விடுப்பதாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

வட்டி கேட்டு மிரட்டல்

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், “மதுரவாயலைச் சேர்ந்த சண்முகம் என்பவர் சூளைமேடு உள்பட பல பகுதிகளில் வட்டிக்கு கடன் கொடுத்து வருகிறார். அவரிடம், குடும்ப சூழ்நிலையின் காரணமாக சுமார் 20க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினோம்.

தற்கொலைக்கு முயன்ற பாதிக்கப்பட்டவர்கள்

வாங்கிய கடனுக்காக பல மடங்கு ரூபாய் வட்டியை பல ஆண்டுகளாக செலுத்தி வருகிறோம். 4 லட்சம் ரூபாய்க்கு 20 லட்சம் ரூபாய் வரை சண்முகத்திற்கு வட்டி செலுத்தியுள்ளோம். கரோனா சூழ்நிலை காரணமாக வட்டி கொடுக்க முடியாமல் போனதால் சண்முகம், தனது மகன்கள் அழகு வேல், பாஸ்கர், பாண்டிதுரை, பால்ராஜ் ஆகியோரை அனுப்பி தங்களிடம் வட்டி கொடுக்கும்படி மிரட்டி, தாக்கினார்கள்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கடனுக்கு மேல் வட்டியை செலுத்திய பிறகும், சண்முகம் தொடர்ந்து கூலிப்படையை ஏவி வட்டிக்கேட்டு வீட்டிலுள்ள பொருள்களை சேதப்படுத்துவதும், பெண்களை கடத்துவது, தாக்குவது போன்ற குற்றச் செயலில் ஈடுபட்டு வருகிறார். கந்துவட்டி, ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி என பொதுமக்களிடம் வசூல் செய்து வருகிறார்.

எனவே, உடனடியாக சண்முகத்தின் மீது காவல் துறையினர், நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை” என வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.