ETV Bharat / city

மேகதாது குறித்து காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் விவாதமா.. ஓபிஎஸ் கண்டனம்

author img

By

Published : Jun 19, 2022, 3:39 PM IST

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

மேகதாது குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் கூறியதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஜூன் 17ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், 'மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது' என ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டுவதற்கு பசவராஜ் தலைமையிலான கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆய்வு செய்து வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இது குறித்து ஒரு அறிவிப்பை இன்று (ஜூன்19) வெளியிட்டுள்ளார்.

அதில், '23-06-2022 அன்று நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி 16-06-2022 அன்று நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

இந்த நிலையில், ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற நிலையில், மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அதன் தலைவரே நேற்று முன்தினம் கூறி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

நேற்று முன்தினம் காலை காவிரி மேலாண்மைக் குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் மேட்டூர் அணையை ஆய்வு செய்துவிட்டு, மாலையில் கல்லணைக்கு வந்து ஆற்றின் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

ஆய்விற்குப் பிறகு பேட்டி அளித்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர், மேகதாது அணை குறித்து 23-06-2022 அன்று நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும்; இது குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று கூறுவது தவறு. தமிழ்நாடு அரசிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

இவ்வாறு பேட்டி அளித்த ஆணையத்தின் தலைவர், காவிரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு என்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீர்ப் பங்கீடை செயல்படுத்துவது தான் தங்கள் கடமை என்றும் கூறி இருக்கிறார். அதாவது, ஒருபுறம் மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறிவிட்டு, மறுபுறம் நீர்ப் பங்கீட்டை செயல்படுத்துவதுதான் எங்கள் கடமை என்று கூறுவது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, நீர்ப் பங்கீட்டை செயல்படுத்துவது தான் காவிரி மேலாண்மை வாரியத்தின் பணி என்று அதற்கான ஆய்வு வரம்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே தவிர, மேகதாது அணை குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.

எனவே, ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் 177.25 டி.எம்.சி. நீரை மாதாந்திர அட்டவணையின்படி அளிக்கிறதா என்பதைத்தான் காவிரி மேலாண்மை வாரியம் உறுதி செய்ய வேண்டும். அதைவிடுத்து, மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்கப் போகிறோம் என்று காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவர் கூறுவது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.

அது மட்டுமல்லாமல், இந்தப் பொருள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தத் தருணத்தில் மேட்டூர் அணையிலும், கல்லணையிலும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆய்வு மேற்கொண்டது விவசாயிகள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கப்படுவது என்பது மேலும் கூடுதலாக 67 டி.எம்.சி. நீரை கர்நாடகம் தேக்கிக்கொள்ள அனுமதிக்கப்படுவதற்குச் சமம். இதன்மூலம், தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு வெகுவாக குறையும்.

ஏற்கெனவே போதிய நீர் இல்லாததன் காரணமாக சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த விவசாயமும் வெகுவாகப் பாதிக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் தனக்குள்ள அதிகார வரம்பிற்கு உட்பட்டு செயல்படவும், மேகதாது அணை குறித்த பொருளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ்நாடு விவசாயிகளின் எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், அதையும் மீறி அந்தப் பொருள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமேயானால், இந்தப் பொருள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதையும், ஆணையத்தின் ஆய்வு வரம்பில் 'மேகதாது அணை' இல்லை என்பதையும் சுட்டிக்காட்டி அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'காவிரியின் உரிமையை காக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.