ETV Bharat / city

'காவிரியின் உரிமையை காக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

author img

By

Published : Jun 18, 2022, 2:08 PM IST

காவிரியின் உரிமையை காக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு பசவராஜ் தலைமையிலான கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றின் மீது காலம் காலமாக இருக்கும் உரிமையை நிலைநாட்டு விதமாகவும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக சட்டப்பூர்வமான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூன்18) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி நீர் பிரச்னை குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுக்கவும், நீர்வரத்தைக் குறைக்கவும் கர்நாடக மாநில அரசு தொடர்ந்து பல்வேறு செயல்களை செய்து வருகிறது. அதில் மிகமுக்கியமானது, மேகதாது அணை கட்டும் திட்டம்! மேகதாது அணையைக் கர்நாடக அரசு கட்டுவது என்பது, தமிழ்நாட்டின் காவிரி உரிமையைத் தடுப்பதும், தமிழ்நாட்டிற்கு வரும் நீர்வரத்தைக் குறைப்பதன் மூலமாகத் தமிழ்நாடு உழவர்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமும்; கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதும் ஆகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும், காவிரி தொடர்பான அனைத்து சட்டம், விதிகளுக்கும் மாறானதாகும்.

எனவே, மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடி வருகிறது. இந்தியப் பிரதமரை நேரில் சந்தித்தபோதும், இதுதொடர்பாக வலியுறுத்தி வந்துள்ளேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்துச் சென்று ஒன்றிய அரசிடம் இதுதொடர்பாக வலியுறுத்தி வருகிறோம். மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்பதும் காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்கக் கூடாது என்பதும்தான் தமிழ்நாடு அரசின் உறுதியான; இறுதியான நிலைப்பாடு!

மேகதாது அணை கட்டக் கூடாது என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கர்நாடக மாநில அரசு தனது பிடிவாதமான செயல்களிலிருந்து பின்வாங்காமல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தஞ்சாவூரில் பேட்டி அளித்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? உச்சநீதிமன்றத்தில் ஒரு விவகாரம் வழக்காக இருக்கும்போது அதனை விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லை. அது தெரிந்தும், விவாதிப்போம் என்று ஆணையத்தின் தலைவர் சொல்வது சட்டவிரோதமானதாகும்.

இதுதொடர்பாக தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை ஒன்றிய அரசுக்கு உணர்த்துவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு டெல்லி செல்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்குழு டெல்லி சென்று ஒன்றிய அமைச்சரைச் சந்திப்பதற்கான நேரம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இக்குழு டெல்லி செல்லும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டெல்லி சென்றுள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள், ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வந்துள்ளதாகச் சொல்லி இருக்கிறார்கள். கர்நாடக அரசின் அழுத்தத்துக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு பணியக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். கூட்டாட்சியின் மாண்பைக் காக்கும் வகையில் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் அமையும் என எதிர்பார்க்கிறேன்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம். அது தொடர்பாகக் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் விவாதிப்பதும் தவறானதாகும். தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத்தில் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். காவிரியின் உரிமையைக் காக்கத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்' என தெரிக்கப்பட்டுள்ளது.

காவிரி பிரச்னை தொடர்பாக, தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் காவிரியில் புதிய அணை அமைக்கும் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் மேற்கொள்ளக்கூடாது என்றும் இது தொடர்பாக உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி துறைக்கு வழங்குமாறும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிங்க: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா முயற்சி: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.