ETV Bharat / city

விரைவில் சுற்றுலாத்தலங்களில் நீர் விளையாட்டுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தகவல்!

author img

By

Published : Mar 31, 2022, 8:42 PM IST

அமைச்சர் மதிவேந்தன்
அமைச்சர் மதிவேந்தன்

தமிழ்நாடு சுற்றுலாத்துறை தொடர்பான அனைத்து தகவல்களை பெறும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டிய உதவிகளையும் ஒரே தளத்தில் மக்கள் தெரிந்துகொள்வதற்காக செயலி வடிவில் மேம்படுத்தத் திட்டம் கொண்டுவரப் போவதாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சுற்றுலாத்துறையின் சிறப்பு கண்காட்சியில் அத்துறைக்கான அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

சென்னை: கரோனா காலத்துக்குப்பின் சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பது, உள்நாட்டு & வெளிநாட்டு சுற்றுலா மேற்கொள்ள ஏதுவான முக்கிய சுற்றுலாத் தலங்கள், அதன் சிறப்பம்சங்கள், பயணம் & தங்கும் வசதி உள்ளிட்டவை தொடர்பாக சிறப்பு கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (மார்ச் 31) முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், குஜராத், ஹிமாச்சல், நேபாளம், மாலத்தீவு உள்ளிட்டவற்றின் அரங்குகள் மூலம் அவற்றில் உள்ள சுற்றுலாவுக்கான வாய்ப்பு பற்றி விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனாவிற்குப் பின் மீண்டும் சுற்றுலா கண்காட்சி, தனியார் சுற்றுலா நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த மானியக் கோரிக்கையின்போது, சுற்றுலாத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், பல புதிய திட்டங்களுக்கான அரசாணை வெளியிடப்பட்டு வருகிறது.

சுற்றுலா சிறப்பு கண்காட்சி
சுற்றுலா சிறப்புக் கண்காட்சி

நீர் விளையாட்டுக்கு நெறிமுறைகள்: குறிப்பாக கொல்லிமலை, ஜவ்வாது மலை ஆகியவற்றில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுலாத்தலங்களில் நீர் விளையாட்டுகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன்பின்னர், தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் நீர் விளையாட்டுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

கொடைக்கானல் ஹெலிகாப்டர் இறங்கு தளம்: சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ள கொடைக்கானல் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் திட்டப்பணி தொடங்கும். தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் மூலம் வருங்காலங்களில் இளைஞர்களை ஈர்ப்பதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுலா குறித்த செயலி மேம்பாடு: இதுவரை சுற்றுலாத் தலமாக கண்டறிந்திடாத இடங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அதிக சுற்றுலாத்தலங்கள், தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் இணைக்கப்படும். சுற்றுலாத் தலங்களில் பொது சுகாதாரம் பராமரிக்கவும், பொதுமக்கள் விதிமீறல் உள்ள இடங்களையும், நபர்கள் குறித்தும் புகார் அளிக்க வழிவகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா குறித்தான அனைத்து விவரங்கள் மற்றும் உதவிகளை ஒரே தளத்தில் அறிந்துகொள்ளும் வகையில் ஏற்கெனவே உள்ள செயலியை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பொதுமக்களுக்கு எச்சரிக்கை - பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.