ETV Bharat / city

பெரியபாளையம் கோயில் நகைகளுக்கான தங்க முதலீட்டு பத்திரம் ஆலய நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பு: ஆண்டொன்றுக்கு கிடைக்கும் ரூ.1.04 கோடி வட்டி!

author img

By

Published : Aug 11, 2022, 5:36 PM IST

Etv Bharat
Etv Bharat

பெரியபாளையம் பவானியம்மன் கோயில் காணிக்கையாக பெறப்பட்ட தங்க நகைகளை, தங்கக் கட்டிகளாக மாற்றி, முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தினை, அத்திருக்கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலில் பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, பலமாற்றுப் பொன் இனங்களை, ஒன்றிய அரசின் மும்பை உருக்காலையில் உருக்கி, தூய தங்கக்கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தினை, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.11) அத்திருக்கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

கோயில்களுக்கு வருமானம்: 2021-2022ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை அறிவிப்பில், “கடந்த 10 ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத்தங்கமாக மாற்றப்படும்.

அதன்மூலம், திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வுபெற்ற நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்“ என அறிவிக்கப்பட்டது.

இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை மண்டலத்திற்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் துரைசாமிராஜூ அவர்கள் தலைமையில் குழு அரசால் அமைக்கப்பட்டது.

இக்குழுவின் முன்னிலையில், பெரியபாளையம், பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்று பொன் இனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அரக்கு, அழுக்கு, போலிக்கற்கள் மற்றும் இதர உலோகங்கள் நீக்கப்பட்டு, 130 கிலோ 512 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டன.

மும்பை எஸ்பிஐ கிளையில் முதலீடு-ஆண்டொன்றுக்கு ரூ.1.04 கோடி: இப்பொன் இனங்களை இத்திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் தீர்மானத்தின் அடிப்படையில் மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்குச்சொந்தமான உருக்காலையில் உருக்கி, தூய தங்கக் கட்டிகளாக மாற்றி பாரத ஸ்டேட் வங்கியின் Revamped Gold Deposit Scheme, 2015 திட்டத்தின்கீழ், தங்கப்பத்திரமாக முதலீடு செய்திடும் பொருட்டு, 91 கிலோ 61 கிராம் எடையுள்ள தூய தங்கக்கட்டிகள் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில் பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டது.

அதன் மதிப்பு ரூ.46 கோடியே 31 லட்சம் ஆகும். மேற்படி தங்க மதிப்பீட்டிற்கு வழங்கப்படும் வட்டி வீதம் 2.25% ஆகும். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு கிடைக்கப்பெறும் வட்டித்தொகையான ரூ.1.04 கோடி இத்திருக்கோயில் சார்ந்த திருப்பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச்செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் துரைசாமிராஜூ,

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) ஆர்.கண்ணன், வேலூர் மண்டல இணை ஆணையர் சி.லட்சுமணன், திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா, பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: "அமமுக பொதுக்குழுவிற்கு ஓபிஎஸ் அழைக்கப்படுவார்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.