ETV Bharat / city

தமிழ்நாட்டில் கரோனா பாதித்தவர்களில் 94.8% பேர் வீட்டுத்தனிமையில் உள்ளனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Jan 28, 2022, 8:03 PM IST

கரோனா
கரோனா

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களில் 94.8% பேர் வீட்டுத்தனிமையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளார்.

சென்னை: கரோனா சிகிச்சையில் உள்ள நபர்களில் 94.8% நபர்கள் வீட்டுத்தனிமையில் சிகிச்சையில் உள்ளனர் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நிலவும் கோவிட்-19 பாதிப்பு குறித்து உரையாடுவதற்கான காணொலிக் கூட்டம் மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் ஜன.28ஆம் தேதியான இன்று நடைபெற்றது.

அமைச்சர் விளக்கம்

அந்தக் காணொலியில், தமிழ்நாட்டிற்குத் தேவையான மருத்துவக் கட்டமைப்பு, தடுப்பூசி ஆகியவை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தயார் நிலையில் உள்ள மருத்துவக்கட்டமைப்பு, தடுப்பூசி நிலை ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், இது குறித்து அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் , 'தமிழ்நாட்டில் ஜன.27 வரை 2,13,534 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளநிலையில், தமிழ்நாட்டில் தினசரி தொற்றுப் பாதிப்பு 28,000-க்கும் கீழ் வரத் தொடங்கியுள்ளது.

நோய் சிகிச்சையில் உள்ளவர்களில் 94.8 % நபர்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சையில் உள்ளனர்.

5.2% நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டங்களில் கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருப்பூர், கன்னியாகுமரி, சென்னை முதலியன நோய்த்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

படுக்கை வசதிகள்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 1,33,246 சிறப்பு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 8% மட்டுமே உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 42,660 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் உள்ளன. அவற்றில் 10% மட்டுமே உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டில் 10,147 ஐசியூ படுக்கைகள் உள்ளன. அவற்றில் 11% மட்டுமே உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி செலுத்தியவர்கள்

தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள்தொகையில், 18 வயதுக்கு மேல் 5.78 கோடி நபர்கள் உள்ளனர். 27.1.2022 வரை, தமிழ்நாட்டில் 9,38,82,099 தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும், 18 வயதுக்கு மேலுள்ள தகுதியுள்ள நபர்களில் 89.83% நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் , 67.30% நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆட்சிக்காலத்தில் 4,34,838 (6 %) தவணை தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டது.

7.5.21முதல் நாங்கள் பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சரின் சீரான வழிகாட்டுதலின்படி, 11,14,550 தவணை தடுப்பூசிகள் அதிகமாகச் செலுத்தப்பட்டுள்ளன.

18 வயதுக்கு கீழுள்ளவர்களுக்குத் தடுப்பூசி

தமிழ்நாட்டில் 27.1.2022 வரை 19 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு 3,46,94,487 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், நாளை (29.1.2022) இருபதாவது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

கடந்த 3.1. 2022 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் உள்ள சைதாப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயதுக்குள்ளான நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

இன்றுவரை 15 முதல் 18 வயதுக்குள்ளான 33,46,000 நபர்களில் 25,87,878 நபர்களுக்கு என 77.34% நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் மற்ற துறைகளுடன் இணைந்து சுகாதாரத்துறை தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது.

மூன்றாவது தவணை தடுப்பூசி

சுகாதாரப்பணியாளர்கள் முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணி முதலமைச்சரால் 10.1.2022அன்று சென்னையில் தொடங்கிவைக்கப்பட்டது.

இன்று வரை 3,31,187 நபர்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்காக 663 சுகாதார மையங்களில் சிறப்புத் தடுப்பூசி முகாம் வாரந்தோறும் வியாழக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும் தடுப்பூசி செலுத்தவும் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசினால் வழங்கப்பட்டு வரும் அனைத்து உதவிகளுக்கும் நன்றி என தெரிவித்துக்கொள்கிறேன்' எனப் பேசி முடித்தார்.

இதையும் படிங்க: வயலில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம் - 2 விமானிகள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.