ETV Bharat / city

'தமிழ்நாட்டில் சூரிய மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்' - ஆளுநர் ஆர்.என். ரவி தகவல்

author img

By

Published : Apr 11, 2022, 6:46 PM IST

ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ள அதேநேரத்தில், சூரிய மின் உற்பத்திக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் நடைபெற்ற பெட்ரோலிய சிக்கனம் குறித்த 'சக்‌ஷம் -2022' நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

சென்னை: பெட்ரோலியப் பொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில் நடைபெற்ற 'சக்‌ஷம்-2022' நிகழ்ச்சியை சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் இன்று (ஏப்.11) ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

'சக்‌ஷம்' என்று குறிப்பிடப்படும் 'சன்ரக்ஷகன் க்ஷம்தா மகோத்ஸவ்' நிகழ்ச்சியின் மூலமாக ஆண்டுதோறும் பெட்ரோலியம் மற்றும் வாயு எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து ஒரு மாதம் வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 22 வரை நடைபெறும் சக்‌ஷம் நிகழ்ச்சிக்கு 'பசுமை மற்றும் தூய்மை ஆற்றல் வாயிலாக இந்திய விடுதலையின் அமுதப் பெருவிழா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் ஓவியங்கள்
மாணவர்களின் ஓவியங்கள்

சக்‌ஷம்-2022: அங்கு விழா அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த, பள்ளி மாணவர்கள் தீட்டிய விழிப்புணர்வு ஓவியங்களை பார்வையிட்ட ஆளுநர் பின் 'சக்‌ஷம்-2022' பரப்புரை வாகனத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், சிறந்த ஓவியங்களை தீட்டிய மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 'மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நாடு உள்ளது.

மாணவர்களுக்கு பரிசு வழங்கிய தமிழ்நாடு ஆளுநர்
மாணவர்களுக்கு பரிசு வழங்கிய தமிழ்நாடு ஆளுநர்

எரிபொருளுக்கு 600 பில்லியன்: இந்தியப் பொருளாதாரம் முன்னேறி வருகிறது. அந்நிய செலாவணியில் எரிபொருள் இறக்குமதிக்கு அதிகமாக செலவிடப்படுகிறது. 600 பில்லியன் டாலர் மதிப்பில் எரிபொருள் ஆற்றலுக்காக செலவாகிறது. 2017ஆம் ஆண்டு நம்முடைய இலக்கு மாறியது. ஆற்றல் என்பது அடிப்படைத் தேவை என்பதால் அதை சிக்கனமாக பயன்படுத்துவது பற்றிய சக்க்ஷம் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்வு தொடங்கப்பட்டது.

2047ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆகியிருக்கும். அப்போது, எரிபொருள் மற்றும் ஆற்றல் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும். ஒவ்வொரு சொட்டு எரிபொருளும் இயற்கையாக சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக தயாரிக்கவும், பயன்படுத்தவும் வேண்டும். ஐ.நாவின் பருவநிலை மாற்றம் தொடர்பான அறிக்கைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. எரிபொருள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் அறிக்கைகள் வெளிவருகின்றது.

100 ஜிகா வாட் பசுமை எரிபொருள் இலக்கு: நமது பூமியைக் காப்பாற்றுவதற்கு பசுமையான எரிபொருள் அவசியம். நச்சு மற்றும் வேதிப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காடுகள் அழிப்பு, நதிகள் அழிப்பு, நீர்நிலைகள் அழிப்பு போன்றவைகளால் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன. 2025ஆம் ஆண்டு 100 ஜிகா வாட் பசுமை எரிபொருள் பயன்படுத்த வேண்டும்.

சூரிய மின்னாற்றல் தேவை: அதை, 2030ஆம் ஆண்டு 500 ஜிகா வாட் என உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டின் காற்றாலைகள் அதிகமாக இருந்தாலும் அதனால் எடுக்கப்படும் மின் ஆற்றல் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் இருந்தது. என்றாலும் தற்போது காற்றாலை மின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அமைப்பு ரீதியான மாற்றங்கள் தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. சூரிய மின்னாற்றலிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.

ஒரே ஆண்டில் 10 ஆயிரம் புதிய நிறுவனங்கள்: பூமி நமது தாய். ஆன்மிக உணர்வு உள்ள தேசத்தில் இயற்கையை மதிக்க வேண்டும். தூய்மையான பசுமையான ஆற்றலை உற்பத்தி செய்வது அவசியம். கார்பனை குறைவாக வெளியேற்றும் ஆற்றல் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

புதிய வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். மிகவும் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியா உள்ளது. புதிய யோசனைகள், ஆய்வுகள் இங்கு தேவைப்படுகின்றன. 2014ஆம் ஆண்டு 400 புதிய நிறுவனங்கள் தான் இந்தியாவில் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் 10 ஆயிரம் நிறுவனங்கள் என அதிகரித்துள்ளது' என்று கூறினார்.

இதையும் படிங்க: தேனியில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.