சென்னை விமான நிலையத்திற்கு பெரிய அளவிலான கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
அப்போது கொழும்புவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த அசாப் அலிகான்(51),
முகமது ரம்சின்(51), ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் (21), கலந்தர் அப்பாஸ்(36), தாஜுல்மின்(41) மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த நாகூர் கனி(23) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறையினர் விசாரித்தனர்.
அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் அவர்களின் உடமைகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். பின்னர் சுங்கத் துறையினர் அவர்களை தனியறைக்கு அழைத்துச் சென்று முழுவதுமாக சோதித்தனர்.
அப்போது, அவர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. ஆறு பேரிடமிருந்து மொத்தம் ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பிலான 2 கிலோ 650 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: குமரியில் ரூ.2 கோடி மதிப்பில் புதிதாக படகு தளம் அமைக்க முடிவு