ETV Bharat / city

'அன்புள்ள அண்ணன்' என்று ஆரம்பித்துவிட்டு ஓபிஎஸ்ஸை கடிதத்தில் வறுத்தெடுத்த ஈபிஎஸ்!

author img

By

Published : Jun 30, 2022, 3:33 PM IST

அதிமுகவை செயல்படாத நிலைக்கு தள்ள முயற்சித்துவிட்டு, எனக்கு கடிதம் அனுப்புவதா? - ஈபிஎஸ் பதில் கடிதம்
அதிமுகவை செயல்படாத நிலைக்கு தள்ள முயற்சித்துவிட்டு, எனக்கு கடிதம் அனுப்புவதா? - ஈபிஎஸ் பதில் கடிதம்

அதிமுகவை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையுதாக இல்லை என்று எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை: நடக்கவிருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை கிடைப்பதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எழுதிய கடிதத்தில்,

"அன்புள்ள அண்ணனுக்கு வணக்கம். தங்களின் 29.06.2022ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், மகாலிங்கம் வழியாகப் பெறப்பட்டது. கடந்த ஜூன் 23அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், 2021ஆம் ஆண்டு டிசம்பர் 1அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை.

'செல்லாது... செல்லாது':ஆதலால், அந்த சட்ட திட்டத் திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல. மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் கடந்த ஜூன் 27அன்று முடிவுற்ற நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்து, கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும்,

ஜூன் 27 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர்.

நான்கு பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தற்போதைய தங்களின் இந்தக் கடிதம் ஏற்படையதாக இல்லை. அதேபோல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும்,

'அதிமுகவை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்ல முயற்சித்தீர்கள்': நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையுதாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி, கழக தலைமை நிலையச் செயலாளர் என்றும்; ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொருளாளர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இரட்டை இலை விவகாரம்: கையெழுத்திட மறுக்கும் ஈபிஎஸ்.. பின்னணி என்ன ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.