திமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்துவோம் - கே.பாலகிருஷ்ணன்

author img

By

Published : Jul 26, 2021, 4:03 PM IST

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன் ()

கெயில் எரிவாயு குழாய் பதிப்பு திட்டம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்தால் திமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று நாள் மாநிலக் குழுக் கூட்டம் ஜூலை 23ஆம் தேதி தொடங்கியது. அதன்படி இன்று மூன்றாவது நாள் குழுக் கூட்டம் கூடியது.

அதில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், சௌந்தரராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திமுகவிற்கு எதிராகப் போராட்டம்

அதைத்தொடர்ந்து, கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில்மக்கள் நம்பிக்கையை பெறும்வகையில் திமுக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரவேண்டும்.

ஆனால், கூட்டணிக் கட்சிகள் எல்லா பிரச்னைகளிலும் ஒருமித்த கருத்துடன் இருப்பார்கள் என்றில்லை. கெயில் எரிவாயு குழாய்ப் பதிப்புத் திட்டம் மக்களின் வாழ்வாதாரம் பாதித்தால் திமுகவிற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும். அதில் எந்த சமரசமும் கிடையாது.

பாஜக நாளுக்கு நாள் மிகவும் மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அடுத்தடுத்து மோசமான மசோதாக்களை நிறைவேற்ற முயற்சிக்கிறது. ஒளிப்பதிவு சட்டத்திருந்த மசோதா, கடல் ஒழுங்காற்று மசோதா என மக்களுக்கு விரோதமான மசோதாக்களைக் கொண்டுவருகிறது.

கோஷ்டி மோதலை தீர்க்க அதிமுக டெல்லி பயணம்

கோஷ்டி மோதலை தீர்க்க, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவரும் இணை ஒருங்கிணைப்பாளுமான எடப்பாடி பழனிசாமி இருவரும் டெல்லி சென்றுள்ளனர். அதிமுக எவ்வளவு பலவீனமான நிலையில் உள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்றில்லை.

பிரதமர் மோடி கூட்டணி தலைவரா, அதிமுகவின் தலைவரா என்று தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட ஏராளமான வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை. அதேபோல திமுகவும் இரண்டு மாதங்களில் அனைத்து திட்டங்களையும் நிரைவேற்றிவிட முடியாது.

அமெரிக்க அரசைக் கண்டித்து ஜூலை 29ஆம் தேதி போராட்டம்

கியூபா மக்களுக்கு எதிராக அமெரிக்க தொடர்ந்து பல்வேறு செயல்களில் ஈடுபட்டுவருகிறது. கியூபா அரசைக் கவிழ்க்க முயல்கிறது. அமெரிக்க அரசைக் கண்டித்து, கியூபா மக்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஜூலை 29ஆம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணி - கே. பாலகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.