ETV Bharat / city

சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை!

author img

By

Published : May 25, 2022, 7:02 AM IST

Updated : May 25, 2022, 11:27 AM IST

சென்னையில் பாஜக நிர்வாகி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு போலீஸ் அவருடன் இருந்தும் கூட கொலை சம்பவத்தை கும்பல் அரங்கேற்றியுள்ளது.

பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை
பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை

சென்னை: கீழ்ப்பாக்கம் நியூ மண்டபம் சாலையைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் (34). இவர் பாரதிய ஜனதாவில் பட்டியலின பிரிவு மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்தார். இவரது பெற்றோர் வீடு சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் இருப்பதால் அடிக்கடி இங்கு வந்து செல்வது வழக்கம். மேலும் இவருக்கு கொலை மிரட்டல் இருப்பதால் தனியாக போலீஸ் பாதுகாப்பை பெற்று உடன் எப்போதும் காவலர் செல்வார்.

நேற்று (மே. 24) இரவு சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில் இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது உடன் வந்த பாதுகாப்பு போலீஸ் பாலகிருஷ்ணன் டீ குடிக்க சென்றார். இருசக்கர வாகனத்தில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் பாலச்சந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்னை காவல் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, கிழக்கு மண்டல இணை ஆணையர் பிரபாகர், திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் ஆகியோர் நேரில் வந்து சிசிடிவி காட்சியை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர்.

கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாலச்சந்தர் தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி பாதுகாப்பு காவலர் (PSO) கேட்டிருந்ததும், அதன்பேரில் பாலச்சந்தருக்கு பாதுகாப்பு காவலர் (PSO) வழங்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. சம்பவம் நடந்த நேரத்தில் பாலச்சந்தர் தனது நண்பர்களுடன் பேசி விட்டு வருவதாக சென்றபோது பாதுகாப்பு காவலர் டீ அருந்தி விட்டு வருவதாக பாலச்சந்தரிடம் கூறிவிட்டு அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்து கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் பாலச்சந்தரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பாலச்சந்தரின் உறவினர்கள் துணிக்கடை நடத்தி வருகின்றனர். அந்த கடையில் மாமூல் கேட்டு அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவர் தொல்லை கொடுத்து வந்ததால் பாலசந்தர் காவல்துறையிடம் புகார் அளித்தார். பிரதீப்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால் பிரதீப்பின் தந்தையான மோகன் என்ற தர்கா மோகனுக்கும், பாலசந்தருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த பிரதீப், நேற்று மீண்டும் பாலசந்தர் உறவினரின் துணிக்கடைக்கு சென்று அங்குள்ளவர்களை மிரட்டி வந்ததால், மீண்டும் பிரதீப் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் தனது தந்தையான மோகனுடன் சேர்ந்து பாலசந்தரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி வந்தததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மோகன், அவரது மகன் பிரதீப் உட்பட 6 பேர் சேர்ந்து பாதுகாப்பு போலீஸ் இல்லாத சமயத்தில் பாலசந்தரை கொலை செய்து விட்டு தப்பியோடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் கொலையாளிகளை கைது செய்த பிறகே முழுமையான காரணம் தெரியும் என்று சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாலச்சந்தர் சமூக வலைத்தளங்களில் மத ரீதியிலான பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வந்ததால் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பை கேட்டு பெற்றுள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கும்பல் ஒன்றிற்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உளவுத்துறை ஏற்கனவே சென்னை காவல்துறைக்கு எச்சரித்து இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் தான் பாலச்சந்தர் கொலை செய்யப்பட்டுள்ளார். போலீஸ் பாதுகாப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் வைத்து பாஜக பிரமுகரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பாதுகாப்பு பணியில் அசட்டையாக இருந்த காவலர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்ஜர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கந்துவட்டி கொடுமை - வீடியோ பதிவிட்டு இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

Last Updated :May 25, 2022, 11:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.