விடுதலைப்போரில் வீரத்தமிழகம் முப்பரிமாண ஒளி ஒலிக்காட்சி..சென்னையில் செப்.1 வரை நீட்டிப்பு

author img

By

Published : Aug 25, 2022, 10:08 PM IST

நீட்டிப்பு
நீட்டிப்பு ()

நாட்டின் 75ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, நடைபெற்றுவரும் சென்னையில் விடுதலைப் போரில் வீரத் தமிழகம் என்ற முப்பரிமாண ஒளி ஒலிக் காட்சிகள் செப்.1 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை: நாட்டின் 75ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி, தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட தேசத் தலைவர்களை சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட் “விடுதலைப் போரில் வீரத்தமிழகம்” என்ற முப்பரிமாண ஒளி ஒலிக் காட்சி ஆக.15 ஆம் தேதி பார்வைக்காகத் திறக்கப்பட்டது.

இக்கண்காட்சி இன்று 25ஆம் தேதி வரையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இம்முப்பரிமாண‌ ஒளி-ஒலிக் காட்சியானது, பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளுக்காக வரும் செப்.1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

200 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்கள், ஆங்கிலேயரின் அடக்குமுறைகள், சுதந்திரத்தின் அருமை ஆகியவற்றை இளம் தலைமுறையினரிடையே கொண்டு செல்லும் நோக்கில் இந்த முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கண்காட்சியில் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்குப் போராடிய அரும்பெரும் தலைவர்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் கொண்ட மாதிரிகளை வடிவமைத்து, அவர்களின் வீரதீரச் செயல்கள், தியாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தென்னகத்தில், குறிப்பாக வீரம் விளைந்த நம் தமிழ்நாட்டில்தான் முதல் சுதந்திரப் போர் ஆரம்பமானது. வேலூர்க் கோட்டையில் நடந்த 'சிப்பாய்களின் புரட்சி'தான் இந்தியாவில் நடந்த முதல் விடுதலைப் போராகக் கருதப்படுகிறது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வீரமங்கை வேலுநாச்சியார், வீரத்தாய் குயிலி, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை போன்ற வீர மறவர்களின் போராட்டங்களும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதியார், தந்தை பெரியார், மூதறிஞர் இராஜாஜி, திருப்பூர் குமரன், கர்ம வீரர் காமராஜர், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத், ஜே.சி. குமரப்பா, பசும்பொன் முத்துராமலிங்கம், கடலூர் அஞ்சலை அம்மாள் போன்ற எண்ணற்ற தலைவர்களின் தியாகங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்திய விடுதலைக்கு வித்திட்ட முத்தாய்ப்பான மூன்று போராட்டங்களான ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய நிகழ்வுகளும் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இக்கண்காட்சி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கண்காட்சிக்கு நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை. அனுமதி முற்றிலும் இலவசம். பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இந்த முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சியினைப் பார்வையிடலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னை ஜார்ஜ் கோட்டையும்... முதல்முதலாக பறந்த தேசியக் கொடியும்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.