ETV Bharat / city

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு!

author img

By

Published : Jul 6, 2022, 6:53 PM IST

mhc
mhc

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு (ஜூலை 07) ஒத்தி வைத்துள்ளது.

சென்னை: ஜூலை 11ஆம் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி, ஓ.பன்னீர்செல்வமும், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், கட்சி விதிப்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட அதிகாரமுள்ளதாகவும், வேறு எவருக்கும் அந்த அதிகாரம் இல்லை என்பதால், 11ஆம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுவில், பொதுக்குழுவை கூட்ட 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும், அந்த விதிகள் பின்பற்றப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ஆனால் வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகும்படி தெரிவித்துள்ளது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வேறு என்ன நிவாரணம் கோரியிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதற்கு, பொதுக்குழுவுக்கு தடை தான் கோரப்பட்டுள்ளது எனவும், இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாகவும் பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவை நாளை தாக்கல் செய்கிறோம், அதனால் வழக்கை நாளைக்கு தள்ளிவைக்க வேண்டும் என கோரினார்.

உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென நீதிமன்றத்தை நிர்பந்திக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் கோரிக்கை வைத்தார்.

மேலும், கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்கு (ஜூலை 07) ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: சென்னையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.