ETV Bharat / bharat

தமிழக மழை வெள்ள பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 2:19 PM IST

Nirmala sitharaman On TN Flood:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என தெரிவித்துள்ளார்.

nirmala sitharaman
nirmala sitharaman

டெல்லி: டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் மீட்புப் பணிகளில் மத்திய அரசின் பங்கு என்ன என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என டிசம்பர் 12-ஆம் தேதி முதல் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மழை பாதித்த அன்று கூட 3 மணி நேரத்துக்கு ஒரு முறை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அதனை மாநில அரசும், அமைச்சர்களும் பொருட்படுத்தவில்லை. அதைவிடுத்து இன்ச் பை இன்ச் எவ்வளவு? மழை பெய்யும் என்று சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்த பிறகு, மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்காமலிருந்தது ஏன்? பாதித்த இடங்களுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் தாமதமாகவே சென்றனர் எனக் குற்றம்சாட்டிய நிர்மலா சீதாராமன் 2015 சென்னை வெள்ள பாதிப்பிலிருந்து தமிழக அரசு என்ன கற்றுக்கொண்டது என்ன என்று கேள்வி எழுப்பினார். மேலும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காகச் செலவு சேய்த ரூ.4,000 கோடி எங்கேப் போனது? என்றும் 45 விழுக்காடு பணிகளை மட்டும் முடித்துவிட்டு 92 விழுக்காடு பணிகள் நிறைவடைந்தது எனக் கூறியது ஏன் என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது: தொடர்ந்து பேசிய அவர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டபோதும் கூட தேசிய பேரிடர் என அறிவிக்கவில்லை. தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை என்று கூறிய அவர் தேசிய பேரிடராக இதுவரை மத்திய அரசு அறிவித்ததே இல்லை. இனி அறிவிக்கவும் முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். தமிழகத்தில், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை மாநில பேரிடர் என மாநில அரசு அறிவிக்க நினைத்தால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும் என்று கூறிய அவர் அதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு அதிகாரிகள் செய்வார்கள் என்று குறிப்பிட்டார்.

தமிழகத்திற்கு மாநில பேரிடர் நிதியாக நடப்பு நிதியாண்டுக்கான இரண்டு தவணையாக மொத்தம் 900 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார். இதனை ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் குற்றம்சாட்டப்படுவது தேசிய பேரிடர் நிதியாக இதுவரை மத்திய அரசு எந்த நிதியையும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தென் மாவட்ட மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது மு.க.ஸ்டாலின் டெல்லியில் என்ன செய்தார்? - நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.