ETV Bharat / bharat

Odisha Train Accident : 124 பேரை அடையாளம் காணுவதில் சிரமம்! டிஎன்ஏ பரிசோதனை நடத்த திட்டம்!

author img

By

Published : Jun 5, 2023, 4:16 PM IST

Train
Train

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 124 பேரை அடையாளம் காண முடியாமல் திணறி வருவதாகவும் டி.என்.ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காண திட்டமிட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பால்சோர் : ஒடிசா மூன்று ரயில்கள் விபத்தில் உயிரிழந்த 275 பேரில் 124 பேரின் சடலங்களை இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்றும் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் புவனேஸ்வர் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

ஒடிசா மாநிலம் பால்சோரில் கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு 7 மணியில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட கோர விபத்தில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் 700க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இண்டர்லாக்கிங் மற்றும் சிக்னலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரயில் விபத்தில் உயிரிழந்த 275 பேரில் 124 பேரை இன்னும் அடையாளம் காண முடியவில்லை என ரயில்வே அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர். திங்கட்கிழமை (ஜூன். 5) காலை வரை 151 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இருப்பினும், மோசமான உடல் நிலை மற்றும் தெளிவற்ற முகம் உள்ளிட்ட காரணங்களால் 124 பேரின் சடலங்களை இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்று புவனேஸ்வர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மேலும் டி.என்.ஏ பரிசோதனை மூலம் சடலங்களை அடையாளம் கண்டு உரியவர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா வெளியிட்ட அறிக்கையில், இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக கூறி உள்ளார். மேலும் அனைத்து உடல்களும் உரிய செயல்முறைக்ளுக்கு பிறகு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக தெரிவித்து உள்ளார். சவக்கிடங்குகளில் இருக்கும் சடலங்களை உறவினர்கள் எடுத்துச் செல்ல வாகனம் உள்ளிட்ட வசதி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மூன்று ரயில்கள் விபத்து நடந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து பாஹநாகா கிராமம் வழியாக பயணிகள் ரயில் சேவையை இந்திய ரயில்வே தொடங்கியது. முன்னதாக அதே வழித்தடத்தில் சோதனை அடிப்படையில் சரக்கு ரயில் இயக்கி பார்க்கப்பட்டது. பாதுகாப்பாக ரயில் செல்ல மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பிரார்த்தனை செய்து ரயில் சேவையை தொடக்கி வைத்தனர்.

இதையும் படிங்க : மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமீன் ரத்து... டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.