ETV Bharat / bharat

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

author img

By

Published : Aug 18, 2021, 2:07 PM IST

Updated : Aug 30, 2021, 7:36 PM IST

Supreme court
Supreme court

தமிழ்நாடு சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல் பரப்புரையின்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தனக்கு, தமிழ்நாட்டின் அப்போதைய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் எஸ்பி ஒருவர் முன்னதாக புகாரளித்தார்.

அதனைத் தொடர்ந்து, தற்போதைய முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்ட அன்றைய எதிர்க்கட்சிகளிடமிருந்து எழுந்த கடும் அழுத்தம் காரணமாக, பெண் எஸ்பியின் புகார் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஆறு பேர் அடங்கிய விசாகா குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.

அதோடு மட்டுமல்லாமல் சிறப்பு டிஜிபியை கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

சிபிசிஐடிக்கு மாற்றம்

தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, 400 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை கடந்த ஜுலை 29ஆம் தேதி சிபிசிஐடி தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணையை அடுத்த ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்திருந்தார். வழக்கு விசாரணை தற்போது விழுப்புரம் நீதிமன்றத்தில் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தன் மீதான் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுமாறும் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு டிஜிபி முன்னதாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் மனு

உச்ச நீதிமன்றத்தில் தான் தொடர்ந்த மனுவில், “வழக்கு விசாரணை முடிவடைந்து, கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்பும், உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தொடர்ந்து கண்காணித்து வருவது, சுசீலா தேவி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முரணானது.

இது போன்ற உயர் நீதிமன்றத்தின் தொடர் தலையீடுகள் இந்த வழக்கில் வேறு மாதிரியான சமூகப் பார்வையை ஏற்படுத்தி ஒரு வகையில் தண்டனையாகவும் மாறியுள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கு இன்று (ஆக.18) விசாரணைக்கு வந்த நிலையில், இவ்வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்று சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும், விசாரணை நீதிமன்றமே வழக்கை சட்டப்படி விசாரிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: முக்கிய வழக்குகளை தமிழ்நாட்டுக்கு வெளியே மாற்ற அடுத்தடுத்த கோரிக்கைகள்... காரணம் என்ன?

Last Updated :Aug 30, 2021, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.