ETV Bharat / bharat

கர்ப்ப கால பதற்றம், பயத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பும், தீர்வும்!

author img

By

Published : Mar 3, 2023, 3:21 PM IST

கர்ப்ப காலத்தில் ஏற்படும் பயம்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் பயம்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பயம், மனக்கவலை அவர்களது நோய் எதிர்ப்புச் சக்தி கட்டமைப்பை பாதிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உரிய சிகிச்சை மூலம் இதற்குத் தீர்வு காண முடியும் என்கின்றனர், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

நியூயார்க்: கருவுற்றபின் பெண்கள் உடல் நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமானது தான். சிலருக்கு முதுகுவலி, அரிப்பு, கால்பிடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதால் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் எந்த வெளிப்படையான காரணமும் இன்றி சோகமாக இருத்தல், குழந்தை பிறப்பு மற்றும் பெற்றோராக இருக்கப்போவது குறித்த கவலை, பதற்றம் ஆகியவை தொற்றிக் கொள்ளும். இதுபோன்ற பிரச்னையால் ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்றங்கள், சோர்வு, உடல் சார்ந்த அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.

இந்நிலையில், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பதற்றம், கவலை, அவர்களது நோய் எதிர்ப்புச் சக்தி கட்டமைப்பையே பாதிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. வெய்ல் கார்னல் மெடிசின் நிறுவனம், ஜான்ஸ் ஹோப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இர்விங் மெடிக்கல் சென்டர் ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வில், கர்ப்ப காலத்தில் பதற்றம், கவலையுடன் இருக்கும் பெண்களின் நோய் எதிர்ப்புச் சக்தி கட்டமைப்பில் மாற்றங்கள் நிகழ்வது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது ரத்த ஓட்டத்திலும் மாற்றங்கள் நிகழ்வது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வெய்ல் கார்னல் மெடிசின் நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர் லாரென் கூறுகையில், "கர்ப்ப காலத்தில் தைரியமாக இருக்கும் பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பதற்றத்துடன் இருக்கும் பெண்களின் நோய் எதிர்ப்புச் சக்தி கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்துக்குப் பிறகும் இது தொடர்கிறது" எனக் கூறியுள்ளார்.

வெய்ல் கார்னல் மெடிசின் நிறுவனத்தின் மற்றொரு மருத்துவ ஆராய்ச்சியாளரான ஓஸ்போர்ன் கூறும் போது, "கர்ப்ப காலத்தில் பதற்றம், கவலையுடன் இருக்கும் பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது. குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தால், பெரும்பாலான தாய்மார்கள் பதற்றத்தை தணிப்பதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வதில்லை. மனக்கவலை, பதற்றத்தை குறைக்காவிட்டால் குறைப்பிரசவம், குறைவான எடையில் குழந்தை பிறப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்" என்றார்.

கர்ப்ப காலத்தில் பதற்றம் மற்றும் மனக்கவலையுடன் இருந்த 56 பெண்கள் மற்றும் பதற்றம் இல்லாத 51 பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கர்ப்ப காலத்தில் பதற்றத்துடன் இருந்த பெண்களுக்கு "சைடோடாக்சிக் டி" செல்கள் அதிகமாகவும், பிரசவத்துக்குப் பிறகு அந்த செல்களின் எண்ணிக்கை குறைந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம், கர்ப்ப காலத்தில் தைரியமாக இருந்த பெண்களுக்கு "சைடோடாக்சிக் டி" செல்கள் குறைவாக இருந்ததும், பிரசவத்துக்குப் பின் அது மேலும் குறைந்ததும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர் ஓஸ்போர்ன் கூறுகையில், "கர்ப்ப காலத்தில் மகளிருக்கு பதற்றம், மனக்கவலை ஏற்படக் கூடாது. ஒருவேளை ஏற்பட்டால் தாயும், சேயும் ஆரோக்கியமாக இருக்க உரிய சிகிச்சை அளிக்கப்படுவது அவசியம்" என்கிறார்.

இதையும் படிங்க: ஒரே ஒரு நாள் இரவு தூக்கத்தை இழப்பதால் மூளைக்கு ஆபத்தா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.