புதுச்சேரி: கர்நாடகா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக நீதிமன்றத்தில் சில முஸ்லிம் அமைப்புகள் மற்றும் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த கர்நாடக நீதிமன்றம் கல்லூரி விதித்த தடை சட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டகுப்பம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி அடுத்த மூல குலத்தில் நேற்று (மார்ச்.20) நடைபெற்ற திருமணத்தில் மணமக்கள் நஸ்ருல்லாக் - நஸ்ரின் ஆகிய இருவரும் ஹிஜாப் எங்களது உரிமை என்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து மணமக்கள் கூறும்போது, ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய சமூகத்தின் தனிப்பட்ட உரிமை, இதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனை கண்டித்து திருமணத்தின் போது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முகம் முழுவதும் பர்தா அணிந்து ஹிஜாப் எங்களது உரிமை என்று வலியுறுத்தி நீதிமன்றத்திற்கு எங்களது எதிர்ப்பை தெரிவித்து உள்ளோம்" என்று கூறினர்.
இதையும் படிங்க:பதவிகள் அனைத்தும் பாண்டவர் அணிக்கே - வெளியானது நடிகர் சங்கத்தேர்தல் முடிவுகள்!