ETV Bharat / bharat

மாநிலங்களவைத் தலைவரைப் போல் நடித்த எம்பி.. குடியரசுத் தலைவர், பிரதமர் வருத்தம்!

author img

By PTI

Published : Dec 20, 2023, 11:52 AM IST

Updated : Dec 20, 2023, 12:29 PM IST

Etv Bharat
Etv Bharat

Mimicked by TMC MP like VP: துணை குடியரசுத் தலைவரைப் போல் நடித்துக் காண்பித்த எம்பியின் செயல்பாடு வருத்தம் அளிப்பதாக குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி: கடந்த டிசம்பர் 3 அன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 10வது நாளான டிசம்பர் 13 அன்று, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை மீறிய சம்பவங்கள் அரங்கேறின. இந்த நிலையில், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் எதிர்கட்சி எம்பிக்களின் கடும் அமளியால் அவை ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

அதேநேரம், இதுவரை 141 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்றும் (டிச.20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று நாடாளுமன்றத்தில், துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் போன்று, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி நடித்துக் காண்பித்தார்.

அது மட்டுமல்லாமல், இதனை காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி மொபைல் போனில் வீடியோ எடுத்தார். இதற்கு பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட X பதிவில், “நாடாளுமன்ற வளாகத்தில் மதிப்புமிக்க துணை குடியரசுத் தலைவர் நடத்தப்பட்ட விதம் வருத்தம் அளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் (எம்பிக்கள்) சுதந்திரமாக தங்களது செயல்பாட்டை பதிவு செய்யலாம். ஆனால், அத்தகைய அவர்களது வெளிப்பாடு கண்ணியத்துடனும், மரியாதையுடனும் இருத்தல் வேண்டும். இதனையே நாடாளுமன்ற கலாச்சாரம் பெருமை கொள்ளும் விதமாக, நாட்டின் மக்களும் எதிர்பார்க்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலங்களைத் தலைவர் ஜெகதீப் தன்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ள X பதிவில், “நேற்று சில மதிப்புமிக்க எம்பிக்களால் மாநிலங்களவைத் தலைவர் நடத்தப்பட்டிருக்கும் விதம் மிகுந்த வலியை அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். இந்த அவமானமிக்க செயல்பாடு 20 வருடங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால், ஒரு மதிப்புமிக்க அரசியலமைப்பு அலுவலகத்தில், அதுவும் நாடாளுமன்றத்தில் துணை குடியரசுத் தலைவருக்கு நடந்திருப்பது துரதிருஷ்டவசமானது என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்த நான் (ஜெகதீப் தன்கர்), இத்தகைய செயல்பாடு எனது கடமை மற்றும் அரசியலமைப்பு கொள்கைகளைப் பாதிக்காது. இதன் மதிப்புகளை நான் இதயப்பூர்வமாக மதிக்கிறேன், எனது வழித்தடத்தை எத்தகைய அவமானங்களும் பாதிக்காது” என கூறியதாக பதிவிட்டுள்ளார்.

மேலும், இத்தகைய செயல்பாடு, தனது விவசாயப் பின்னணியை அவமானப்படுத்துவதாக உள்ளது எனவும், தன்னை மட்டுமல்லாது தனது மக்களையும் அவமானத்துப்படுத்துவதாக இருப்பதாகவும் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வருத்தம் தெரிவித்ததாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? - திருமாவளவன் சூசகம்!

Last Updated :Dec 20, 2023, 12:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.