ETV Bharat / bharat

கார்கில் நாயகன் நினைவு நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

author img

By

Published : Aug 16, 2021, 10:13 AM IST

Updated : Aug 17, 2021, 6:19 AM IST

கார்கில் நாயகன்
கார்கில் நாயகன்

முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

டெல்லி: காங்கிரஸ் அல்லாத முழுமையாக ஐந்தாண்டுகளை நிறைவுசெய்த முதல் மத்திய அரசு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்றத் திட்டங்கள் தந்த முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்.

இவரது ஆட்சிக்காலத்தில்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் போர் மூண்டது. இதில் இந்தியா வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் காரணமாக, வாஜ்பாய் கார்கில் நாயகன் என்றும் வர்ணிக்கப்படுகிறார். இவர் நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.

  • முதல் முறை 1996 (16 நாள்கள்),
  • இரண்டாவது முறை 1998 (சுமார் ஒன்றரை ஆண்டுகள்),
  • மூன்றாவது முறை முழுமையான ஆட்சி (1999-2004)

இவரது பிறந்தநாளான டிசம்பர் 25 ஆண்டுதோறும் நல்லாட்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவருக்கு 2014ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. இவர் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகத் திறம்படச் செயலாற்றியவர்.

பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கி கட்டமைத்தவர்களில் முக்கியமான தளகர்த்தாக்களில் ஒருவராக இருந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். இவர்தான் அக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமரும்கூட. ஜனசங்கின் நிறுவன உறுப்பினராக இருந்த இவர், சியாம பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபாத்யாய ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் அக்கட்சியில் தலைவரானார்.

செல்ஃபி பிரியர்களை கவர்ந்திழுக்கும் வாஜ்பாய் சிலை

வாஜ்பாய் 2018 ஆகஸ்ட் 16 அன்று உடல்நலக் குறைவு காரணமாக மறைந்தார். இந்த நிலையில், அவரது மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், வாஜ்பாயின் நினைவிடத்தில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி அவரை நினைவுகூர்ந்தனர்.

மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

வாஜ்பாய் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
வாஜ்பாய் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

இதையும் படிங்க: 'ஆப்பரேஷன் விஜய்' - கார்கில் பின்னணி கதைக்களம்!

Last Updated :Aug 17, 2021, 6:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.