ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சவாய்மாதோபூரில் உள்ள சூர்வால் கிராமத்தில் 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி தகாதேவி என்பவரது வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அப்போது கொள்ளையர்கள் தகாதேவியை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினர். இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மார்ச் 14ஆம் தேதி சவாய்மாதோபூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சூர்வால் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது சில போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசினர். அதோடு போலீசார் வாகனத்தை தீயிட்டுக்கொழுத்தினர். அப்போது வாகனத்தில் இருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பூல் முகமது உடல்கருகி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. அப்போது 89 பேர் குற்றவாளிகளாக போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
அதன்பின் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு 11 ஆண்டுகளாக சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 18) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 30 பேர் மட்டுமே முக்கிய குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு குற்றவாளிகளில் மகேந்திர சிங் என்பவருக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் அபராதமும், பன்வாரி என்பவருக்கு ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் அபராதமும், மீதமுள்ள அனைத்து குற்றவாளிகளுக்கும் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை பூல் முகமது குடும்பத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை