ETV Bharat / bharat

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதில் சிக்கல்.. உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2023, 8:37 AM IST

Etv Bharat
Etv Bharat

Case against Minister Senthil Balaji: செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடரக் கூடாது என உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத் துறையினர் சோதனை செய்தனர். இதனையடுத்து, அவரை கடந்த ஜூன் 14 அன்று இரவு அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட, உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, சிறையில் உள்ள மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது. இதனிடையே, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என உத்தரவிட்ட தமிழ்நாடு அரசு, அவர் வகித்து வந்த இலாகாக்களான மின்சாரம், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை ஆகியவை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமிக்கும் வழங்கப்பட்டது.

ஆனால், சிறையில் இருக்கும் ஒருவர் அமைச்சர் பதவியில் இருக்கக் கூடாது என வலியுறுத்தி, அவரை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். இதனை சட்டப்படி மேற்கொள்வோம் என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், அன்று இரவே, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில், இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால், இந்த வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில்தான், சமூக செயற்பாட்டாளர் எம் எல் ரவி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும், செந்தில் பாலாஜி மீதான வழக்கு முடிவுக்கு வரும் வரை, அவர் அமைச்சராக தொடரக் கூடாது என உத்தரவிட கோரியுள்ளார்.

மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 154, 163 மற்றும் 164 ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக நீக்குவது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் கடிதம் ஒன்றை வெளியிட்டார். மேலும் அதே நாளில், அட்வகேட் ஜெனரலிடம் கருத்து கேட்குமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதை மேற்கோள் காட்டி, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைக்க மற்றொரு கடிதத்தை வெளியிட்டது. இது தன்னிச்சையான, தீவிரமான மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது, அங்கு அவர் பணிபுரியும் அதிகாரியாக இருப்பதால், அவர் தனது உத்தரவை திரும்பப் பெற முடியாது எனவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த ஜூன் 29 அன்று ஆளுநர் மாளிகையால் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்தது. அதேநேரம், கடந்த செப்டம்பர் 5 அன்று, இலாக இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரக் கூடாது என கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவால் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவை சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேறிய 10 தீர்மானங்கள்! என்னென்ன தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.